ஆரணி மீண்டும் திமுகவிடம் திரும்புமா? தொகுதியை தக்க வைக்குமா அதிமுக? விறுவிறு தேர்தல் களம்
சென்னை: வரப்போகும் தேர்தலுக்கு ஜரூராக தயாராகி வருகிறது ஆரணி லோக்சபா தொகுதி. இங்கு எம்பியாக உள்ளவர் அதிமுகவின் ஏழுமலை.
இவர் செஞ்சி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, செஞ்சி, மயிலம் ஆகிய சட்டசபைத் தொகுதிகளை உள்ளடக்கியதுதான் ஆரணி லோக்சபா தொகுதி.
மொத்த வாக்காளர்கள் 10,96,046 ஆவர். கடந்த முறை தேர்தலில் திமுக வேட்பாளர் ஆர்.சிவதாண்டவத்தை எதிர்த்து போட்டியிட்டார் ஏழுமலை. 2,43,844 வாக்குகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றார். பி.காம்.., பி.எல் படித்த ஏழுமலையின் வயது 63 ஆகும். இவரை செஞ்சி சேவல் ஏழுமலை என்றுகூட சொல்வார்கள்.
கல்வி உதவிதொகை
திண்டிவனம் - கிருஷ்ணகிரி பிரிவில் சாலை பணியை விரைந்து முடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகத்துக்கான கல்வி உதவித்தொகையை மத்திய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை அடிக்கடி வலியுறுத்தியவர் ஏழுமலை ஆவார். அதனால்தான் நாடாளுமன்றத்தில் இவரது செயல்பாடுகள் பாராட்டும்படியே இருக்கின்றன.
வருகை பதிவேடு
ஏனென்றால் 76 முறை அவை விவாதங்களில் பங்கேற்றதுடன், தன் தொகுதி மக்கள் பிரச்சனை உள்ளிட்டவை குறித்து 470 கேள்விகளை எழுப்பி உள்ளார் ஏழுமலை. இவரது வருகை பதிவேடும் 88 சதவீதம் என நல்லபடியாக உயர்ந்த நிலையிலேயே உள்ளது. உண்மையிலேயே ஆரணி தொகுதிக்கான சில செயல்பாடுகளை மெச்சத்தகுந்த வகையிலேயே இவர் செய்திருப்பதாக கூறப்படுகிறது. எம்பி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு நலத்திட்ட பணிகளையும் மேற்கொண்டுள்ளார்.
ரூ.24.68 கோடி
தொகுதி வளர்ச்சிக்காக மொத்தம் ரூ.24.68 கோடி ஒதுக்கப்பட்டதில், இதுவரை 19.55 கோடி ரூபாயை மக்கள் நலனுக்காக பயன்படுத்தி உள்ளார் ஏழுமலை. கையிருப்பில் 3.23 கோடி ரூபாயையும் மிச்சப்படுத்தி வைத்திருக்கிறார்.
உயர்மின் கோபுரம்
ரூபாய் 75 லட்சம் மதிப்பில் ஆரணி கோட்டை மைதானத்தை சுற்றி நடைப்பாதை அமைத்துள்ளார். அதேபோல ரூ. 7 லட்சம் செலவில் ஆரணி முழுதும் உயர்மின் கோபுரம் விளக்கு அமைத்துள்ளார் ஏழுமலை என தொகுதியில் நல்ல பெயர் உள்ளது.
ஏ.கே.மூர்த்தி
சிறப்பாக ஏழுமலை பணியாற்றி இருந்தாலும், இது வடமாட்டத்தை உள்ளடக்கிய தொகுதி என்பதால், பாமக ஏ.கே.மூர்த்தி இங்கு வென்றிருக்கலாம் என்ற கருத்து மேலோட்டமாக உள்ளது. ஏனென்றால், ஏகே மூர்த்தி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தால், மக்களுக்கு மேலும் பல நலத்திட்டங்கள் செய்திருப்பார் என்றும், இன்னும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவில் திட்டங்களை கொண்டு வந்திருப்பார் என்றும் கூறப்படுகிறது.
பாமக கைப்பற்றுமா?
வரப்போகிற தேர்தலில் பாமக மும்முரம் காட்டி வருகிறது. அதிலும் வட மாவட்டங்களில் இன்னும் ஆழமாகவே காலூன்றி இருக்கிறது. அதனால் வரும் தேர்தலில் ஏழுமலையே வெற்றி பெறுவாரா? அல்லது அவரது செயல்திறன்களை முறியடிக்கும் வகையில் பாமக ஆரணியை கைப்பற்றுமா என்பதை பார்க்கலாம்.