இதுதான் உண்மையான அதிமுக.. மீண்டும் அதிமுக எம்எல்ஏவாகவே செயல்படுவேன்.. முதல்வரை சந்தித்த ரத்தினசபாபதி
சென்னை: மீண்டும் அதிமுக எம்எல்ஏவாகவே செயல்படுவேன் என அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக அதிருப்தி எம்எல்ஏவாக செயல்பட்ட இவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றாக இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவினர் தினகரனை ஆதரித்து தனி அணியாக செயல்பட்டு வந்தனர். அவ்வாறு செயல்பட்டு வந்தவர்கள் திடீரென முதல்வருக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தியதால் தற்போது 18 எம்எல்ஏக்களும் பதவிகளை இழந்து தவித்து வருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழக சட்டசபை தேர்தலிலும் அமமுக வெற்றி பெற்று ஆர் கே நகரை போல் தினகரன் தனி முத்திரை பதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அதிமுக எம்எல்ஏக்களான அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோர் தினகரன் ஆதரவாளர்களாக செயல்பட்டு அவர்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் கேட்கும் அளவுக்கு நடந்தது.
அரவக்குறிச்சி எம்எல்ஏ
இதில் கோர்ட் தலையிட்டு அந்த மூவரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என தடை விதித்தது. இதனிடையே செந்தில் பாலாஜி தேர்தலுக்கு முன்பாகவே அமமுகவில் இருந்து திமுகவுக்கு வெளியேறி பின்னர் அரவக்குறிச்சி எம்எல்ஏவாக வெற்றி பெற்றார்.
திமுகவில்
இந்த நிலையில் இரு தேர்தல்களிலும் டிடிவி தினகரனின் அமமுக தோல்வியையே சந்தித்தது. இதையடுத்து அமமுகவிலிருந்து ஒவ்வொருவராக வெளியேற தொடங்கிவிட்டனர். தங்கதமிழ்ச் செல்வனும் அண்மையில் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துவிட்டார்.
செய்திகள்
அது போல் அமமுகவின் அமைப்பு செயலாளராக இருந்த இசக்கி சுப்பையா, அக்கட்சியிலிருந்து விலகி மீண்டும் அதிமுகவுக்கே சென்றுவிட்டார். இந்த நிலையில் இன்று மாலை அதிருப்தி எம்எல்ஏவாக செயல்பட்டு வந்த அறங்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பதாக செய்திகள் வெளியாகின.
ஆதரவாக
இதையடுத்து இன்று மாலை தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் தனபாலை ரத்தினசபாபதி சந்தித்து பேசினார். பின்னர் அவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தொடர்ந்து அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுவேன் என உறுதியளித்தார்.
விலகிவிட்டோம்
இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தடுமாறி போய் இருந்த என்னை மீண்டும் அதிமுகவில் இணைத்த பெருமை விஜயபாஸ்கரையே சாரும். தினகரன் கட்சி தொடங்கியவுடன் நான் உள்பட மூவரும் விலகிவிட்டோம்.
ஏன் இணைந்தேன்
அமமுகவையும் டிடிவி தினகரனையும் மக்கள் புறக்கணித்துவிட்டார்கள். இனி அதிமுக எம்எல்ஏவாக செயல்படுவேன். அதிமுக ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். அதனால்தான் மீண்டும் இணைந்தேன்.
தாய்க்கழகம்
கட்சியும் சின்னமும் இங்கே இருப்பதால் இதுதான் உண்மையான அதிமுக என மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். என்னை போல் பிரபுவும் கலைச்செல்வனும் மீண்டும் தாய்க்கழகத்துக்கே திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் ரத்தினசபாபதி.