இரு செந்தில்கள்.. ஒரு பழிக்குபழி பிளாஷ்பேக்.. தூள் பறக்கும் அரவக்குறிச்சி.. இடி மின்னலுக்கு வாய்ப்பு
அரவக்குறிச்சி தேர்தலில் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
சென்னை: நடக்க போகும் தேர்தலில் அரவக்குறிச்சியை கைப்பற்ற போவது அதிமுகவா? அமமுகவா? திமுகவா? என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் சாட்சாத் செந்தில் பாலாஜியேதான்!
அதிமுகவில் இருந்த போதும் சரி, அமமுகவில் இருந்தபோதும், திமுகவில் இருந்தபோதும், இப்போது இருக்கும்போதும் சரி.. கரூர் என்றாலே அது செந்தில்பாலாஜிதான் என்ற பெயரே தொடர்ந்து முணுமுணுக்கப்பட்டு வருகிறது. மு.தம்பிதுரையையே அன்று வெற்றி பெற வைத்தவர் ஆயிற்றே!
திமுகவில் இவர் திரும்பவும் இணைந்ததுமே கரூர் மாவட்ட பொறுப்பாளராக உயர்த்தப்பட்டார். ஆனால் பொறுப்பு கொடுத்த கொஞ்ச நாளிலேயே திமுகவே வியந்து பார்க்கும் அளவுக்கு செல்வாக்கினால் அசுர வளர்ச்சி பெற்றுவிட்டார். அதனால்தான் வேறு ஆப்ஷனே இல்லாமல் அவருக்கு சீட் தந்தது திமுக.
சென்னையின் குடிநீர் தேவையை ஓரளவுக்கு சமாளிக்கலாம்... வீராணம் ஏரி நீரை 70% பயன்படுத்த திட்டம்
செந்தில்பாலாஜி
எப்போது அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளராக செந்தில்பாலாஜி அறிவிக்கப்பட்டாரோ, அப்போதே அவர்தான் வெற்றி பெறுவார் என்பது கிட்டத்தட்ட எல்லா கட்சிகளுமே ஒரு முடிவுக்கு வந்துவிட்டன. அதாவது அவருக்கு எதிராக யாரை கொண்டு போய் வேட்பாளராக நிறுத்தினாலும் அவரால் சோபிக்க முடியாது என்பதே கூற்று. இருந்தாலும் அதிமுகவும், அமமுகவும் இந்த விஷயத்தில் ரொம்பவே மெனக்கெட்டு வேட்பாளரை அறிவித்துள்ளது.
சாகுல் ஹமீது
திமுகவுக்கு அடுத்தபடியாக வேட்பாளர் தேர்வில் அமமுக தட்டி செல்கிறது. ஏனெனில், சாகுல் ஹமீது என்பவரை அறிவித்துள்ளார் தினகரன். அரவக்குறிச்சியில் கவுண்டர் சமூகத்தவர் அதிகமாக உள்ளனர் என்றாலும், பள்ளப்பட்டி உள்பட பல இடங்களில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழ்கின்றனர்.
பரம எதிரி
அதாவது சுமார் 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் இங்கு உள்ளதால், இவர்களது வாக்குகளை வளைக்கவே சாகுல் ஹமிதை நிறுத்தியுள்ளார் தினகரன். அது மட்டும் இல்லை.. இவர் செந்தில்பாலாஜிக்கு பரம எதிரியும்கூட.
தோல்வியை தழுவினார்
இப்போது அதிமுக வேட்பாளராக செந்தில்நாதன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டவர். அது மட்டும் இல்லை.. இந்த தேர்தலில் இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.சி பழனிச்சாமியிடம் சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இதற்கு காரணம் யார் தெரியுமா? செந்தில் பாலாஜியேதான்!
நேரடி எதிரி
அன்று செந்தில் பாலாஜி சரியாக வேலை பார்க்காமல் விட்டதால்தான் செந்தில்நாதன் தோல்வி அடைந்ததாக சொல்கிறார்கள். எனவேதான் அவரைப் பழிவாங்க இப்போது செந்தில்நாதனை அதிமுக களம் இறக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இப்போதைக்கு இவர் கட்சியின் இளைஞர், இளம்பெண்கள் பாசறையின் மாவட்ட செயலாளராக இருந்தாலும், தொகுதியில் இவருக்கென்று குறிப்பிட்ட செல்வாக்கு இருக்கிறதாம்.
யாருக்கு அரவக்குறிச்சி?
ஆக மொத்தம் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனுக்கும், அமமுக வேட்பாளர் சாகுல் ஹமீதுக்கும் நேரடி எதிரி.. ஒரே எதிரி.. செந்தில்பாலாஜிதான்! இருவரும் தனித் தனியாக தாக்குவார்களா அல்லது.. ரகசியமாக கை கோர்த்து செந்தில் பாலாஜியை பதம் பார்ப்பார்களா.. பார்ப்போம்.. அரவக்குறிச்சி யாருக்கு போக போகிறது என்று!