கலெக்டர் வீட்டில் அத்துமீறி நுழைந்த வழக்கு.. செந்தில் பாலாஜிக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன்.. ஹைகோர்ட்
சென்னை: கரூர் மக்களவை தொகுதி தேர்தல் அதிகாரி வீட்டில் அத்துமீறி நுழைந்த வழக்கில் அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கரூர் மக்களவை தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஜோதிமணி போட்டியிட்டுள்ளார். இவரை ஆதரித்து இறுதிகட்ட பிரச்சாரம் மேற்கொள்ள செந்தில்பாலாஜி திட்டமிட்டு இருந்தார்.
இதற்கான அனுமதியை அளிக்க மாவட்ட தேர்தல் அலுவலரும், கரூர் மாவட்ட ஆட்சியருமான அன்பழகன் மறுத்துவிட்டார். இந்த விவகாரத்தில் அவரது இல்லத்துக்கு நள்ளிரவில் திமுகவினர் புகுந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஆட்சியர் அன்பழகன் புகாரின் பேரில் தாந்தோணிமலை போலீசார் செந்தில் பாலாஜி உள்ளிட்ட சிலர் மீது தேர்தல் அதிகாரி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக வழக்கு பதிவு செய்தனர்.
பாட்டி இடுப்பை ஜோதிமணி பிடிக்க.. ஜோதிமணி தோளில் பாட்டி கை போட.. ஒரே லவ்வுதான்!
இந்நிலையில் இந்த வழக்கில் கைது ஆவதில் இருந்து தவிர்க்கும் வகையில் அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், செந்தில் பாலாஜி உள்பட 3 பேருக்கு நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. வாரத்தில் 3 நாட்கள் தாந்தோணிமலை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என நிபந்தனையுடன் உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உள்ளது.