கருணாஸுடன் மோதிய டிசி அரவிந்தன், திருவள்ளூருக்கு டிரான்ஸ்பர்!
சென்னை: தமிழகத்தில் இன்று, 61 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அ்தில் எம்எல்ஏ கருணாஸ், விமர்சனத்திற்கு ஆளான துணை ஆணையர் அரவிந்தன் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளதும் ஒன்றாகும்.
முக்குலத்தோர் புலிப்படை சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறி ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் கலந்து கொண்டு பேசிய அந்த அமைப்பின் தலைவரும், திருவாடானை சட்டசபை உறுப்பினருமான கருணாஸ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.நகர் துணை கமிஷனர் அரவிந்தன் ஆகியோரை சர்ச்சைக்குரிய வகையில் மிரட்டும் தொனியில் பேசினார்.
காக்கிச் சட்டை
கருணாஸ் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸ் அதிகாரிகள் குறித்துப் பேசும்போது, காக்கிச் சட்டையைக் கழற்றி வைத்துவிட்டு வாருங்கள், பார்த்துவிடலாம் என்று கருணாஸ் ரொம்பவே ஆவேசமாக பேசியிருந்தார். முதல்வர் மற்றும் காவல் துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய நடிகர் கருணாஸ் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்கள் குவிந்தன.
கைது செய்யப்பட்ட கருணாஸ்
எனவே, வன்முறையைத் தூண்டும் விதமாகவும் முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியதாகவும் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் எம்.எல்.ஏ கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அதே மாதம் 23ம் தேதி அதிகாலையிலேயே, சாலிகிராமத்தில் உள்ள கருணாஸ் வீட்டிற்கு நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டியன் தலைமையில் சென்ற போலீசார், கருணாசை எழுப்பி கைது செய்து கொண்டு சென்றனர்.
இதையடுத்து கருணாஸ் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தாக்கிய முக்குலத்தோர் புலிப்படை
இதேபோல காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த போராட்டத்தின் போது சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்த கூடாது என்று முக்குலத்தோர் புலிப்படை மற்றும் 16 அமைப்புகள் சார்பில் தர்ணா நடைபெற்றது. போராட்டத்தின் போது ஐபிஎல் போட்டியை காண வந்த ரசிகர்களை ஓட ஓட அடித்து விரட்டினர். இதுகுறித்தும் கருணாஸ் மீது திருவல்லிக்கேணி போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
துணை கமிஷனர்
கருணாஸ் கட்சிக்காரர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும், காவல்துறையினருக்கு போகும் வழக்குகளை இடையில் மறித்து கட்ட பஞ்சாயத்து செய்து பணம் சம்பாதிக்கும் அளவுக்கு போய்விட்டதாகவும், தி.நகர் துணை ஆணையராக இருந்த அரவிந்தனுக்கு தகவல் போனதால், கட்ட பஞ்சாயத்து செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டதாகவும், போலீஸ் நடவடிக்கையால் ஆத்திரமடைந்து இப்படி ஒரு கூட்டத்தை போட்டு, அரவிந்தனை கருணாஸ் வசைபாடியதாகவும், அப்போது சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
டிரான்ஸ்பர் எச்சரிக்கை
மேலும், "ஏற்கனவே அரவிந்தனை வேறு ஊருக்கு மாற்றட்டுமா என்று என்னிடம் கேட்டார்கள். நான் தான் தமிழகத்தை சேர்ந்த அதிகாரியாக உள்ளார், சின்ன பையனாக உள்ளார். அவரை டிரான்ஸ்பர் செய்ய வேண்டாம் என்றேன். அவர் யூனிபார்மை கழட்டாமல் விடமாட்டேன்" என்று கருணாஸ் பேசியதாக ஆடியோக்களும் வைரலாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.