'தமிழில் அர்ச்சனை'.. ஆரம்பமே எந்த கோயிலில் தெரியுமா.. திமுக அரசு அதிரடி ஆக்சன்
சென்னை: அடுத்த வாரம் முதல் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார். சென்னையில் பிராட்வேயில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் இந்த தகவலை அமைச்சர் தெரிவித்தார். கொரோனா காரணமாக கோயில்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் வகையில் கூட்டம் அதிகம் கூடும் பகுதிகளை மூட நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
இதனிடையே ஆடிமாதம் என்பதால் அம்மன் கோயில்களில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதேபோன்று முருகன் கோயில்களில் ஆடி கிருத்திகை விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். . அந்தவகையில் ஆடி கிருத்திகை விழா நேற்று முதல் முருகன் கோயில்களில் களைகட்ட தொடங்கியது.
முருகன் கோயில்கள்
இதை காண கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இதனால், 3ம் தேதி வரை பக்தர்கள் முருகன் கோயிலுக்கு செல்ல அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர்
அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்ட உத்தரவின்பேரில் , பழனி தண்டயுதபாணி கோயில், திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில், திருத்தணி முருகன் கோயில், திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயில், பழமுதிர்சோலை, சுவாமிமலை மற்றும் மதுரை மீனாட்சியம்மன் கோயில் கள்ளழகர் கோயில் உட்பட முக்கிய அம்மன் கோயில்களில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் தரிச னத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கந்தகோட்டம்
இதனிடையே சென்னை மண்டல இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஹரிப்பிரியா வெளி யிட்டுள்ள அறிக்கையில் வடபழநி ஆண்டவர் திருக்கோயில், கந்தக்கோட்டம் கந்தசாமி திருக்கோயில், சென்னை சூளை அங்காள பரமேஸ்வரி கோயில், பாடி வேட்டம்மன்கோயில் மற்றும் அருள்மிகு தேவிபாலியம்மன் மற்றும் இளங்காளியம்மன் திருக்கோயில் உள்ளிட்ட பல்வேறு முருகன் மற்றும் அம்மன் கோயில்களில் பக்தர்கள் நேர்த்திக் கடனாக தீமீதி திரு விழா, காவடி சுமந்தும், பொங்கல் மற்றும் மாவிளக்கு படையலிட்டு தரிசனம் செய்வார்கள்.
ஆடி அம்மாவாசை
தற்போது கொரோன தொற்று பரவும் அச்சம் உள்ளதால் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை அரசு கூட்டங்களை தவிர்க்க அறிவுறுத்தியுள்ள நிலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. கோயில்களில் ஆகம விதிகளின் படி கால பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சதுகிரி, திருவண்ணாமலை உள்பட தமிழகம் முழுவதும் புகழ்பெற்ற கோயில்கள் அனைத்திலும் ஆடி அமாவாசைக்கும் அனுமதி இல்லை..
தமிழில் அர்ச்சனை
கோயில்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதித்தாலும், ஆகமவிதிப்படி, பூஜைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அடுத்த வாரம் முதல் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார். சென்னையில் பிராட்வேயில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் இந்த தகவலை அமைச்சர் தெரிவித்தார்.
எங்கு ஆரம்பம்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சி என எப்போதும் விமர்சனம் செய்யும் பாஜக தலைவர்களே திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகளை பாராட்டி வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலால் "வசை பாடியவர்கள் கூட வாழ்த்தும் நிலை" ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கோவில்களில் விரைவில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட உள்ளது. அதற்காக 47 கோவில்களை தேர்வு செய்து "அன்னை தமிழில் அர்ச்சனை" என விளம்பர பலகைகளும் வைக்க உள்ளோம். முதற்கட்டமாக வரும் வாரத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தமிழில் அர்ச்சனை தொடங்கப்பட உள்ளது. அர்ச்சனை செய்பவரின் பெயர்,தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் வெளியில் தகவல் பலகையில் வைக்கப்படும்.தமிழில் அர்ச்சனை தேவைப்படுவோர் அந்த அர்ச்சகரை தொடர்பு கொண்டு தமிழில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்யலாம்.
ஸ்டாலின் முடிவெடுப்பார்
தமிழில் அர்ச்சனை செய்யும் முறை முதலில் பெரிய கோவில்களிலும், அதனைத் தொடர்ந்து சிறிய கோவில்களிலும் கொண்டுவரப்பட உள்ளது. அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யக் கூடிய அர்ச்சகர்கள் இருக்கிறார்கள். அவர்களை முறையாக பயன்படுத்தி இனி அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இனி தமிழகத்தில் கோவில் திறந்திருக்கும் அனைத்து நேரங்களிலும் தமிழில் அர்ச்சனை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மூன்றாவது அலையை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரிய கோவில்களில் ஆடி மாத திருவிழாக்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா உள்ளிட்ட பல இடங்களில் இருந்து மக்கள் பெரிய கோவில்களுக்கு ஆடி மாதங்களில் வருவது வழக்கம் எனவே அதன் மூலம் தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அவற்றை கருத்தில் கொண்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு பிறகு கோவில்களை மீண்டும் திறப்பது தொடர்பாக முதலமைச்சர் முடிவெடுப்பார்" இவ்வாறு கூறினார்.