வரும் வியாழன் முதல்.. ஒரு வாரம் வங்கிகள் மூடப்படுகிறதா.. பீதியில் மக்கள்.. உண்மை என்ன?
Recommended Video
சென்னை: சமூக வலைதளங்களில் இந்த வாரம் வியாழக்கிழமை தொடங்கி அடுத்து ஒரு வங்கிகள் மூடப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக உண்மையில் வங்கிகள் எத்தனை நாட்கள் மூடப்பட உள்ளது என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணியாற்றும் நான்கு ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு வரும் செப்டம்பர் 26, செப்டம்பர் 27ம் தேதிகளில் (அதாவது வரும் வியாழன் மற்றும் வெள்ளி) வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவித்துள்ளன.
பொதுத்துறை வங்கிகள் இணைப்பை கண்டித்தும்,, ஊதிய உயர்வை வலியுறுத்தியும், பென்சனை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
வங்கிகள் ஒரு வாரம் லீவு?
இதன் காரணமாக ஒரு வாரம் வங்கிகள் மூடப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வேகமாக பகிரப்படுகின்றன. அவர்கள் பதிவிட்டுள்ள தகவலின்படி, செப்டம்பர் 27. 28ம் தேதி போராட்டம் நடைபெறுவதால் வங்கிகள் இயங்காது. அத்துடன் செப்டம்பர் 28ம் தேதி 4வது சனிக்கிழமை என்பதால் அன்றும் வங்கிகள் இயங்காது. அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை 29ம் தேதியும் இயங்காது, திங்கள்கிழமை செப்டம்பர் 30ம் தேதி வங்கி அரைவருட கணக்கு முடிவு என்பதால் அன்றும் இயங்காது. அதன் பிறகு அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி என்பதால் அன்றும் வங்கிகள் இயங்காது என்று கூறியுள்ளனர்.
வேலை நிறுத்தம்
ஆனால் உண்மையில் ஏழு நாள்கள் வங்கிகள் இயங்காதா என்றால் அதில் உண்மை இல்லை. இது குறித்து அறிய முயன்ற போது சில தகவல்கள் வங்கிகள் தரப்பில் கிடைத்தது. அதன்படி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணியாற்றும் நான்கு சங்கங்களின் ஊழியர்கள் கூட்டமைப்பு வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி அலுவலர்கள் சங்கம், இந்திய தேசிய வங்கி அதிகாரிகள் காங்கிரஸ் மற்றும் வங்கி அதிகாரிகளின் தேசிய அமைப்பு என நான்கு அமைப்புகள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன.
ஓரளவு பாதிக்கக்கூடும்
இந்த வேலை நிறுத்தம் குறித்து எஸ்பிஐ வங்கி தரப்பு கூறுகையில், வேலைநிறுத்தம் நடைபெறும் நாட்களில் அனைத்து எஸ்பிஐ வங்கிகள் , அதன் கிளை அலுவலங்களிலும் இயல்பான சேவையை உறுதி செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளை செய்துள்ளோம். எனினும் வேலை நிறுத்தத்தால் வங்கி பணிகள் ஓரளவுக்கு பாதிக்கப்படக்கூடும் என தெரிவித்துள்ளது.
இயல்பான சேவை
பாங்க் ஆப் இந்தியா, தனது வங்கியின் கிளைகள் மற்றும் அலுவகங்களில் வேலை நிறுத்தத்தின் போது சீரான செயல்பாட்டை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
அக்.1ல் வங்கிகள் இயங்கும்
செப்டம்பர் 29ம் தேதி நான்காவது சனிக்கிழமை என்பதால் விடுமுறை தான். செப்டம்பர் 30ம் தேதி வங்கி அரைவருட கணக்கு முடிவு என்றாலும் ஆர்பிஐ இணையதளத்தில் விடுமுறை நாள் என தெரிவிக்கப்படவில்லை. இதேபோல் அக்டோபர் 1ம்தேதி வங்கிகள் இயங்கும்.
வேலை நிறுத்தம் அறிவிக்கவில்லை
வேலை நிறுத்தத்தை பொதுத்துறை வங்கிகள் தான்அறிவித்துள்ளன. அந்த சமயத்தில் தனியார் வங்கிகள் அறிவிக்கவில்லை. எனவே தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமபுற வங்கிகள் இயங்கும். இதனிடையே வங்கிகள் வேலை நிறுத்தம் காரணமாக பலரும் ஏடிஎம்களை தேடி சென்று மொத்த பணத்தையும் எடுத்து வருவதவால் ஏடிஎம்கள் பல பணம் இல்லாமல் உள்ளது. இதனால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.