மாம்பழமும், பம்பரமும் கிடைக்குமா.. பெரும் சிக்கலில் பாமக, மதிமுக
சென்னை: தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் இல்லாததால் மதிமுகவும் பாமகவும் தங்களுக்கு தங்களது கட்சியின் சின்னம் கிடைக்குமா என்ற தவிப்பில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள மாநில கட்சிகளில் அதிமுக திமுக-வை அடுத்து தேமுதிக மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உள்ளது. இதனால்தான் தேர்தல் ஆணையம் நடத்திய ஆலோசனைகளுக்கும் இந்த கட்சிகள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தது.
ஒரு தேசிய கட்சி தனது அங்கீகாரத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் மக்களவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 2% வாக்குகள் அல்லது 11 எம்.பிக்களை கொண்டிருக்க வேண்டும். அதுவே மாநிலக் கட்சிகள் என்றால் சட்டப்பேரவைத் தேர்தலில் 6 சதவிகித வாக்குகளோ அல்லது 2 சட்டமன்ற உறுப்பினர்களையோக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் இந்திய தேர்தல் ஆணையம் அந்தக் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும். இதன் பின்னர் அங்கீகாரம் தொடர்பான விதிகளில் சில மாற்றங்களும் செய்யப்பட்டன. அதன்படி, அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை மறு ஆய்வு செய்வதற்கான விதிகளை திருத்தி, மறு ஆய்வுக் காலத்தை 5-லிருந்து 10 ஆண்டுகளாக நீட்டித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த அடிப்படையில் பாமகவும் மதிமுகவும் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்றிருந்தன. அதனால் இந்த கட்சிகளுக்கு மாம்பழமும், பாமபரமும் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால் இரு கட்சிகளும் இந்த அங்கீகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் அளவில் தேர்தலில் வாக்குகளை பெறவில்லை. தொடர் தோல்விகளை சந்தித்து வந்ததால் இரு கட்சிகளின் அங்கீகாரமும் தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டது. மதிமுகவின் தேர்தல் அங்கீகாரம் 2010-லும் பாமகவின் தேர்தல் அங்கீகாரம் 2011 லும் தேர்தல் ஆணையம் பறித்தது. இதன் விளைவாக பாமகவின் மாம்பழம் சின்னமும் மதிமுகவின் பம்பரம் சின்னமும் சுயேச்சை சின்னங்களாக மாறிவிட்டன. இதனால் இந்த சின்னங்களை சுயேச்சை வேட்பாளர்கள் யார் வேண்டும் என்றாலும் கோரிப் பெற முடியும்.
இந்த நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் பாமக மாம்பழச் சின்னத்தையும் மதிமுக பம்பரம் சின்னத்தையும் கேட்கும் பட்சத்தில் சுயேச்சை வேட்பாளர்களும் இதை கேட்டால் யாருக்கு இதை வழங்குவது என்ற சிக்கல் ஏற்படும். தேர்தலின்போது தேர்தல் ஆணைய நடைமுறைப்படி 15 நாட்களுக்கு முன்னதாக வேட்பாளர்களும் கட்சிகளும் தங்களுக்கான சின்னங்களை கேட்டுப் பெறலாம். அப்போது பதிவு செய்யப்பட கட்சிகளான பாமகவும், மதிமுகவும் தங்களுக்கான சின்னங்களை கோருவார்கள் அதே வேளையில் சுயேச்சை வேட்பாளர்களும் கோரினால் பாமகவுக்கும் மதிமுகவுக்கும் சின்னங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.
மதிமுகவும் பாமகவும் எப்படி கடந்த 2010 மற்றும் 2011 ஆண்டுகளில் போதிய வாக்குகளை பெற தவறியதால் தங்களது அங்கீகாரத்தை இழந்தார்களோ அதுபோல வரும் மக்களவைத் தேர்தலில் தேமுதிக குறிப்பிட்ட வாக்குகளை பெறத் தவறும்பட்சத்தில் அதன் அங்கீகாரம் பறிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. 2011 ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 29 -இடங்களைப் பெற்ற தேமுதிக தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்றது. அடுத்து வந்த தேர்தல்களிலும் அன்கீகாரத்துக்கன வாக்கு சதவீதத்தை பெற்றே வந்துள்ளது. 2014 மக்களவைத் தேர்தலில் 5.19 சதவீத வாக்குகளை பெற்ற அக்கட்சி 2016 சட்டப்பேரவை தேர்தலில் 2.39 சதவீத வாக்குகளை பெற்று அங்கீகாரத்தை தக்க வைத்துக் கொண்டது. அதே வேளையில் வரும் தேர்தலில் இந்த வாக்கு சதவீதம் குறையும் பட்சத்தில் இந்த கட்சியின் அங்கீகாரமும் பறிக்கப்படும் அபாயம் அந்தக் கட்சிக்கு உள்ளது.