என்ன லேபிள் ஒட்டுறீங்களா..? ஜம்முனு சைக்கிள்ல போன போட்டோவை போட்டு திமுகவை கேள்வி கேட்ட ஜெயக்குமார்!
சென்னை : நான் அடிக்கல் நாட்டிய ராயபுரம் போஜராஜ நகர் சுரங்கப்பாதை பணி பாதி முடிந்துவிட்ட நிலையில் மீண்டும் அடிக்கல் நாட்டி லேபிள் ஒட்டும் வேலை செய்வதா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை ராயபுரம் மண்டலம், போஜராஜன் நகர், கண்ணன் தெருவை இணைக்கும் வகையில் ரூ13.40 கோடி மதிப்பில் வரையறுக்கப்பட்ட வாகன சுரங்கப் பாதை அமைக்கும் திட்டத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு இன்று தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், இந்த திட்டத்தை அதிமுக ஆட்சியில் தான் அமைச்சராக இருந்தபோது தொடங்கி வைத்ததாகவும், அந்த திட்டத்திற்கு மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அதிமுக ஆட்சியில் தொடங்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், தற்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.
வாரிசு அரசியலால் சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகல்! சீனியரும் செம அப்செட்- கோர்த்துவிடும் ஜெயக்குமார்!
அமைச்சர்கள் தொடங்கி வைத்த திட்டம்
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று பெருநகர சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், வார்டு 52 மற்றும் 53 போஜராஜன் நகர், கண்ணன் தெருவை இணைக்கும் வகையில் இரயில்வே சந்திக்கடவு 11A ல் ரூ13.40 கோடி மதிப்பில் வரையறுக்கப்பட்ட வாகன சுரங்கப் பாதை அமைக்கும் திட்ட பணியினை தொடங்கி வைத்தனர்.
ராயபுரம் சுரங்கப்பாதை
ராயபுரம் போஜராஜன் நகரில் அமையவுள்ள இந்த சுரங்கப் பாதை திட்ட பணியின் மொத்த மதிப்பு ரூ.20 கோடி. இந்த சுரங்கப்பாதையின் மொத்த நீளம் 207 மீ, அகலம் 6 மீட்டர். இதில் 37 மீட்டர் ரயில்வே நிர்வாகத்தாலும், 170 மீட்டர் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பிலும் அமைக்கப்படவுள்ளது. ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் இப்பணி முடிவுற்றுள்ளது. சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.13.40 கோடி மதிப்பில் மூலதன மானிய நிதியின்கீழ் 170 மீட்டர் நீளத்திற்கு அணுகு சாலை அமைக்கப்படவுள்ளது. இப்பணிக்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு, திட்டப் பணி இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
நான் தொடங்கி வைத்த திட்டம்
இந்நிலையில், இந்த திட்டத்தை அதிமுக ஆட்சியில் தான் தான் தொடங்கி வைத்ததாகவும், அந்த திட்டத்திற்கு மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் இந்த திட்டத்தை தொடங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், தற்போது திமுக அமைச்சர்கள் தொடங்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.
லேபிள் ஒட்டுவதா?
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுக ஆட்சியில் (2018) என்னால் அடிக்கல் நாட்டப்பட்ட ராயபுரம் போஜராஜன் நகர் சுரங்கப்பாதை பணி பாதி முடிந்துவிட்ட நிலையில் மீண்டும் அடிக்கல் நாட்டி லேபிள் ஒட்டும் வேலை செய்வதா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.