அறிஞர் அண்ணா குடும்ப நிலத்தை அபகரிக்க சதி.. கலெக்டரிடம் பரபரப்பு புகார்
சென்னை: காஞ்சிபுரத்தில் அண்ணா குடும்பத்தின் அனுபவத்தில் உள்ள அரசு குத்தகை நிலத்தை அபகரிக்க முயற்சி நடப்பதாக புகார் கிளம்பியுள்ளது.
காஞ்சிபுரத்தில் முன்னாள் தமிழக முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகன் டாக்டர் பரிமளத்திற்கு கடந்த 1995ம்வருடம் தமிழக அரசால் 7 ஏக்கர் நிலம் 20 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்பட்டது.
அண்ணாவின் வளர்ப்பு மகன் பரிமளம் மறைவிற்குப் பிறகு அவரது குடும்பத்தினர் அரசு குத்தகை நிலத்தை பராமரித்து வந்த நிலையில் குத்தகை காலம் முடிவடைந்த காரணத்தால் நிலத்தை அபகரிக்க முயற்சி நடப்பதாகவும் அதனை தடுத்து நிறுத்தி அந்த நிலத்தின் குத்தகையை மீண்டும் பரிமளம் குடும்பத்தின் வாரிசுகளுக்கு வழங்கப்பட வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்ட மன்ற உறுப்பினர் க.சுந்தர் தலைமையில் காஞ்சிபுரம் சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன், செய்யூர் சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.டி அரசு, மதுராந்தகம் சட்ட மன்ற உறுப்பினர் புகழேந்தி, ஒன்றிய நகர பேரூர் திமுக நிர்வாகிகள் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.