சூர்யாவை செருப்பால் அடித்தால் பணம் தருவதாக நான் அறிவிக்கவில்லை.. அர்ஜுன் சம்பத் விளக்கம்
சென்னை: நடிகர் சூர்யா மீது செருப்பால் அடித்தால் பணம் தருவதாக தான் கூறவில்லை என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மறுப்பு தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு தொடர்பாக, நடிகர் சூர்யா, சமீபத்தில் காட்டமாக ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் நீட் தேர்வை மனுநீதி தேர்வு என்று சூர்யா குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில்தான் சூர்யாவை செருப்பால் அடித்தால் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்ததாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது.
நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ.1 லட்சம் பரிசு தரும் அர்ஜூன் சம்பத்- இந்து மக்கள் கட்சி ஷாக்
விளக்கம்
இந்த தகவலை அர்ஜுன் சம்பத் மறுத்துள்ளார். இந்து மக்கள் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. நடிகர் சூர்யா மீது செருப்பால் அடித்தால் பணம் தருவதாக என் படம் போட்டு பொய் பிரச்சாரம் நடக்கிறது என்று அர்ஜுன் சம்பத் அதில் விளக்கம் அளித்துள்ளார்.
முற்றுப்புள்ளி
அர்ஜுன் சம்பத் இவ்வாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டதாக அதிர்வலைகள் ஏற்பட்ட நிலையில், அந்த சர்ச்சைகளுக்கு தற்போது அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஆனால் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார் என்பதை மறுக்கவில்லை.
நிகழ்ச்சி
அதேநேரம், திண்டுக்கல்லில் நேற்றுமுன்தினம், இடஒதுக்கீட்டு போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த 21 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தர்மா கலந்து கொண்டு பேசினார்.
செருப்பால் அடித்தால்
அப்போது, நீட் விவகாரத்தில் சூர்யா, நீதிமன்றத்தை அவமதித்து பேசியிருக்கிறார். நடிகர் சூர்யாவை யாரேனும் செருப்பால் அடித்தால் அந்த நபருக்கு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் ரூ1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்களும் எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.