இமமுக ஆட்சிக்கு வந்தால் இலவச பெட்ரோல்.. 4 துணை முதல்வர்கள் நியமனம்.. அள்ளி விடும் அர்ஜுனமூர்த்தி!
சென்னை: தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸுடன் இலவச பெட்ரோல் கார்டும் வழங்கப்படும் என ரஜினியின் தொடங்கப்படாத கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்தவரும் புதிதாக கட்சி தொடங்கியவருமான அர்ஜுனமூர்த்தி தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளார்.
பாஜகவின் அறிவுசார் பிரிவின் நிர்வாகியாக சிறப்பாக செயல்பட்டு வந்தவர் அர்ஜுனமூர்த்தி. இவரது தலைமையின் கீழ்தான் வேல் யாத்திரை போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இப்படிப்பட்ட அர்ஜுனமூர்த்தி பாஜகவிலிருந்து விலகி ரஜினிகாந்தின் அறிவிக்கப்படாத கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இது வேற லெவல் அரசியல்.. தமிழ்நாட்டின் விஸ்வரூப அரசியல்.. முழுசாக டி.ஆராக மாறிய அர்ஜுனமூர்த்தி!
ரஜினி ரசிகர்கள்
ஆனால் ரஜினிகாந்த் உடல்நிலை பாதிப்பால் தான் அரசியலுக்கு வரவில்லை என அறிவித்துவிட்டார். இதையடுத்து அர்ஜுனமூர்த்தி தனியாக ஒரு கட்சியை தொடங்க போவதாக அறிவித்தார். இதற்கு ரஜினி ரசிகர்களின் ஆதரவை கேட்டார். ஆனால் இவரையெல்லாம் தலைவராக ஏற்க முடியாது என சொல்லிவிட்டார்கள்.
மாற்றம்
மேலும் தலைவர் இடத்தில் ரஜினியை தவிர வேறு யாரையும் வைத்து பார்க்க விருப்பமில்லை என தெரிவித்துவிட்டார்கள். இதையடுத்து அர்ஜுனமூர்த்தி இன்றைய தினம் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்பதை தொடங்கினார். இந்த கட்சி மக்கள் விரும்பும் மாற்றத்தை கொடுக்கும் என்கிறார்.
பஸ்பாஸ்
கட்சியை தொடங்கி வைத்து அர்ஜுனமூர்த்தி பேசுகையில் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி ஆட்சிக்கு வந்தால் பஸ்பாஸுடன் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பெட்ரோல் கார்டும் கொடுக்கப்படும். அது போல் எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் 4 துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவர் என்றார்.
நதி நீர் இணைப்பு
இவர் தொடங்கிய இமமுக கட்சி வெற்றியடைய ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினியின் கொள்கையிலிருந்து இவர் வேறுபடுவதாக நெட்டிசன்கள் கூறுகிறார்கள். நதி நீர் இணைப்பு திட்டத்திற்கு ரஜினி குரல் கொடுத்த நிலையில் அவரது நண்பரோ இலவசங்களை திணிக்க பார்க்கிறாரே என்கிறார்கள்.