தூங்கி வழியும் நெடுஞ்சாலை ஆணையம்... பல இடங்களில் பாஸ்டேக் ஸ்கேனர்கள் கோளாறு
சென்னை: சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசலை குறைக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட பாஸ்டேக் முறை பல இடங்களில் பயணிகளுக்கும், டோல்கேட் ஊழியர்களுக்கும் சண்டையை ஏற்படுத்தி வருகிறது.
சுங்கச்சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள பாஸ்டேக் ஸ்கேனர்களில் ஏற்படும் கோளாறே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
பாஸ்டேக் ஸ்கேனர்கள் வேலை செய்யாததால் அதற்கு சென்சார் கிடைக்கும் வரை வாகனம் நிற்க வேண்டியுள்ளதாகவும், இதனால் வாகன நெரிசல் குறைந்தபாடில்லை எனவும் கூறப்படுகிறது.
வாகன நெரிசல்
நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்தி செல்லும் முறையை ஒழித்து பாஸ்டேக் எனும் புதிய டிஜிட்டல் முறையை கொண்டு வந்துள்ளது தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம். இந்த நடைமுறை வரும் ஜனவரி 15-ம் தேதி முதல் கட்டாயமாகவுள்ளது.
ஸ்கேனர்
பாஸ்டேக் ஸ்டிக்கர்களை கார் கண்ணாடியில் ஒட்டுவதன் மூலம் சுங்கச்சாவடிகளில் பொருத்தப்படும் ஸ்கேனர்கள் அதனை ஸ்கேன் செய்து வாகனங்களுக்கு வழி விடும். இந்த புதிய நடைமுறை செயல்பாட்டுக்கு வருவதில் பல்வேறு குளறுபடிகளும், முறைகேடுகளும் அரங்கேறுகின்றன. இதனை சரிசெய்ய வேண்டிய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையமோ தூங்கி வழிந்துகொண்டு இருக்கிறது.
அனுபவமில்லை
இதனிடையே தமிழகத்தின் பல இடங்களில் குறிப்பாக திருச்சி தூத்துக்குடி இடையே உள்ள டோல்கேட்களில் பாஸ்டேக் ஸ்கேனர்கள் முறையாக வேலை செய்யவில்லை என புகார் எழுந்துள்ளது. இது குறித்து வாகன ஓட்டிகள் விளக்கம் கேட்டால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அனுபவமின்றி அவர்களும் சேர்ந்து முழிக்கும் அவலம் தான் உள்ளது.
2 வசூல்
பாஸ்டேக் ஸ்கேனர் வேலை செய்யவில்லை, ஆகையால் பணம் ரொக்கமாக செலுத்துங்கள் என சில இடங்களில் பணம் வசூலிக்கப்படுவதாகவும், ஆனால் அவ்வாறு வசூலித்த 10 நிமிடத்தில் பாஸ்டேக் கணக்கில் இருந்தும் தொகை பிடித்தம் செய்யப்படுவதாகவும் பரவலாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. எனவே இது குறித்து கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு நெடுஞ்சாலை துறை ஆணைய அதிகாரிகளுக்கு உள்ளது.