காந்தி பிறந்தநாளிலாவது எனது பிள்ளை வீடு திரும்புவானா?.. அற்புதம்மாள் உருக்கம்
சென்னை: மகாத்மா காந்தியின் பிறந்தநாளிலாவது எனது பிள்ளை வீடு திரும்புவானா என அற்புதம்மாள் உருக்கமான பதிவிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காக வருகை தந்தார். அப்போது அவர் அங்கு மனித வெடிகுண்டு வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகின்றனர்.
இதையடுத்து ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் அந்த கோப்பு மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் கவலையடைந்த அற்புதம்மாள் , மகாத்மா காந்தியின் 150 பிறந்தநாளையொட்டி அற்புதம்மாள் மீண்டும் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் "எந்த நிரபராதியும் தண்டிக்கப்பட கூடாது" என்று சொன்ன காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாளிலாவது அறிவு உள்ளிட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கட்டும் என கூறியிருந்தார்.
காந்தி 100வது பிறந்த நாளில் நாடு முழுவதும் உள்ள 100க்கு மேற்பட்டோர் மரண தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர்.அவர் 150வது பிறந்தநாளில் மாநிலஅரசின் விடுதலை பரிந்துரைக்கு ஆளுநர் மதிப்பளிப்பாரா?எனது பிள்ளை வீடு திரும்புவானா?#MahathmaGandhi150_Release7Tamils
— Arputham Ammal (@AmmalArputham) October 2, 2019
இந்த நிலையில் இன்று காந்தியின் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அற்புதம்மாள் ஒரு புதிய ட்வீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் காந்தி 100வது பிறந்த நாளில் நாடு முழுவதும் உள்ள 100க்கு மேற்பட்டோர் மரண தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
அவர் 150வது பிறந்தநாளில் மாநிலஅரசின் விடுதலை பரிந்துரைக்கு ஆளுநர் மதிப்பளிப்பாரா?எனது பிள்ளை வீடு திரும்புவானா? என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.