வழியும் கண்ணீர் விழிகளோடு காத்திருக்கிறோம் அவன் விடுதலைக்கு.. அற்புதம்மாள் ட்வீட்
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக அற்புதம்மாள் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
சென்னை: வழியும் கண்ணீர் விழிகளோடு காத்திருக்கிறோம் அவன் விடுதலைக்கு! என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில், கைதாகி தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யக் கோரி பல வருடங்களாக தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல தலைவர்களும் 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி வருகின்றனர்.
இது சம்பந்தமாக தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரைத்து கடிதம் எழுதியும் அது சம்பந்தமாக ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆதங்கம்
ஆனால் தருமபுரி பஸ் எரிப்பில் 3 மாணவிகளை எரித்து கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக தண்டனை கைதிகள் 3 பேரை விடுதலை செய்ய ஆளுநர் பரிந்துரைத்திருந்தார். இது மேலும் சர்ச்சையாக்கியது. இப்போது 7 பேர் விடுதலை என்ன ஆனது என்றே தெரியவில்லை.
|
வழியும் கண்ணீர்
இது சம்பந்தமாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். அதில், 'நீதி வெல்வதெப்போ...? விடுப்பில் வந்தான் மகிழ்ந்தோம். விடைபெற்றுச் சென்றான் உடைந்தோம். வழியும் கண்ணீர் விழிகளோடு காத்திருக்கிறோம் அவன் விடுதலைக்கு!''
|
100 நாள்
இன்றுடன் 100 நாள் முடிந்தது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது... அமைச்சரவை பரிந்துரைத்தது... ஆளுநர் மௌனம் ஏன்? நிரபராதியின் தாய் மனதை மக்கள் புரிந்துகொண்டார்கள். ஆளுநர் மாளிகைக்கு புரிவதெப்போ நீதி வெல்வதெப்போ?
காத்திருக்கிறோம்
விடுப்பில் வந்தான், 'மகிழ்ந்தோம்'. விடைபெற்றுச் சென்றான், 'உடைந்தோம்' வழியும் கண்ணீர் விழிகளோடு காத்திருக்கிறோம், அவன் விடுதலைக்கு'?? என்று பதிவிட்டுள்ளார்.