ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்
சென்னை: தலைநகர் சென்னையின் குடிநீர் பஞ்சத்தை போக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து, குடிநீர் எடுத்து வரும் திட்டம் தொடர்பாக தெற்கு ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
தமிழகத்தில் பருவமழை பொய்த்ததன் காரணமாகவும், வாட்டி வதைத்த கோடை வெயிலின் காரணமாகவும் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
சுமார் 1 கோடிக்கும் மேல் மக்கள் வசித்து வரும் தலைநகரில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அத்தியாவசிய தேவைளுக்கு கூட நீரின்றி மக்கள் அல்லாடி வருகின்றனர். ஏராளமான உணவகங்கள் தண்ணீர் பிரச்சனை காரணமாக இழுத்து மூடப்பட்டுள்ளன.
பள்ளிகள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் என அனைத்து தரப்பையும் தண்ணீர் பிரச்சனை ஆட்டி வைத்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, சென்னையில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலமாக குடிநீர் கொண்டு வரும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.
இந்த திட்டத்திற்காக ரூ.65 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்நிலையில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து, சென்னைக்கு வேகன்களில் குடிநீர் எடுத்து செல்வது தொடர்பாக அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன் ஆய்வு மேற்கொண்டனர்.
ரயில்வே மற்றும் அரசு இணைந்து செயல்பட்டு எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் குடிநீரை சென்னைக்கு எடுத்து செல்வது எப்படி என ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் சென்னை மாநகர குடிநீர் வாரியமானது, தெற்கு ரயில்வேக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில் தமிழக அரசின் ஆலோசனை அடிப்படையில் தினந்தோறும், 10 மில்லியன் லிட்டர் குடிநீர் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. 6 மாதங்களுக்கு தினந்தோறும் குடி தண்ணீரை எடுத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசின் முயற்சி மற்றும் திட்டத்திற்கு, தெற்கு ரயில்வே ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை தெற்கு ரயில்வே அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. மேலும் ரயில்களில் குடிநீரை கொண்டு வருவதற்கு தேவையான வேகன்களை ஏற்பாடு செய்து தந்து உதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜோலார்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்க கூடிய குடிநீரை எடுத்து, ரயில் மூலம் சென்னை வில்லிவாக்கத்திற்கு கொண்டு வந்து அங்கிருக்க கூடிய குடிநீர் தொட்டியில் சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு தண்ணீரை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே இந்த சிறப்பு திட்டத்தை செயல்படுத்த தெற்கு ரயில்வே உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், தண்ணீரை கொண்டு வருவதற்கான வேகன்களை ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.