மக்கள் தலைவன்... ஓ.பன்னீர்செல்வத்தை புரோமோட் செய்வதற்கான ஏற்பாடுகள் ஜரூர்.. பின்னணியில் ஓ.பி.ஆர்..!
சென்னை: மக்கள் தலைவன் என்ற புதிய அடைமொழியோடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை புரோமோட் செய்வதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இந்த புதிய விளம்பரங்கள் ஓ.பி.எஸ். தரப்பில் கொடுக்கப்பட்டு வருகின்றன.
10 ஆண்டுகாலம் தொடர்ந்து ஓ.பி.எஸ். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ததை சிலாகிக்கும் வகையில் விளம்பரங்களில் வரிகள் இடம்பெற்றுள்ளன.
அதிமுகவில் ஒரு பெண் மாவட்ட செயலாளர் கூட இல்லையே.. ஓபிஎஸ், சசிகலா மீது கமல்ஹாசன் அட்டாக்
நீயா? நானா?
அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை என செய்தியாளர்களை சந்திக்கும்போதெல்லாம் அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் பேட்டியளிப்பதை பலரும் கண்டிருக்கலாம். சிரித்த முகத்துடன் ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும் கேமரா முன் தோன்றுவதை பார்ப்பவர்கள், ''எப்படி ஒற்றுமையாக இருக்கிறார்கள் பார்'' என தங்களுக்குள் புளங்காகிதம் அடைந்து கொள்வார்கள். இது எல்லாமே தொலைக்காட்சிகளில் பார்ப்பவர்களுக்கு மட்டுமே.
இரண்டு பேரும்
அதிமுக தலைமையுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு மட்டுமே தெரியும் ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி. அனல் பறக்கும் அரசியல் அவர்கள் இருவருக்கும் மத்தியில் நடந்து வருவது அதிமுக முன்னணியினர் அறிந்ததே. இந்நிலையில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டு அவரை முன்னிறுத்தி அக்கட்சி சார்பில் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
புரோமோட்
இந்நிலையில் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தை மையப்படுத்தி அவருக்கு மக்கள் தலைவன் என்ற அடைமொழியை சூட்டி புதிதாக விளம்பரங்கள் கொடுக்கப்படுகின்றன. ஓ.பி.எஸ்.ஸை முழுமையாக புரோமோட் செய்யும் வகையில் நடைபெறும் இந்த நிகழ்வின் பின்னணியில் அவரது மகன் ரவீந்தரநாத் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் தேவை
ரஜினியின் அரசியல் வருகையால் ஓ.பி.எஸ். தன்னை விளம்பரங்கள் மூலம் மக்கள் மத்தியில் முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் கணபதி. மேலும், எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே மக்கள் மத்தியில் நன்கு பரிச்சயம் பெற்று மனதில் பதிந்துவிட்டார் என்றும் ஓ.பி.எஸ். இப்போது தான் அதனை செய்யத் தொடங்கியிருக்கிறார் எனவும் கூறினார்.