உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்... வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டன
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. அதற்காக வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி மாநகராட்சி நகராட்சி மற்றும் பேரூராட்சி ஊராட்சி என அனைத்து பகுதிகளிலும் வார்டு மறுவரையறை என பல்வேறு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான இடஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டு அரசாணை பிறப்பித்து உள்ளது. அதன்படி உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு, அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் சிறப்பு ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில், கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி மற்றும் அதிகாரிகளுடன் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
உள்ளாட்சி தேர்தலை ஒட்டி வார்டு மறு வரையறை செய்யப்பட்டது மற்றும் மாநகராட்சி பகுதியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி என அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட வார்டு மறுவரையறை மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட வாக்காளர்கள் மற்றும் மொத்த வாக்காளர் பட்டியல், இறுதி வாக்காளர் பட்டியல் என அனைத்து தகவல்களையும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமியிடம், ஆட்சியர் ராசாமணி வழங்கினார்.
இதே போல், சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களுக்கும் சேர்த்து 5,800 வாக்குசாவடிகள் அமைக்கவுள்ளன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டல அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்திய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், வாக்குசாவடிகள் குறித்து அறிக்கை பெற்றுள்ளார்.
அதன்படி சென்னை மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. உள்ளாட்சி தேர்தலுக்காக சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களுக்கும் சேர்த்து 5,800 வாக்குசாவடிகள் அமைக்கவுள்ளனர்.
மேலும், வாக்காளர் பட்டியலை பொருத்தவரையில், மக்களவைத் தேர்தலுக்கான சென்னை வாக்காளர் பட்டியலை வைத்துக்கொண்டு புதிய வாக்காளர்களையும் இணைக்கும் நோக்கில் சிறப்பு முகாம்கள் நடத்தவும் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதே சமயம், சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, மொத்தம் உள்ள 200 வார்டுகளில் ஆண்களுக்கு 95 வார்டுகளும், பெண்களுக்கு 105 வார்டுகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன.