பிபிசி ஆவணப்படம் பார்த்த மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது.. வேல்முருகன் ஆவேசம்!
மத்திய அரசால் தடை செய்யப்பட்ட ஆவணப்படத்தை தமிழ்நாடு அரசே மாநிலம் முழுவதும் கொண்டு சேர்க்கவேண்டும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிபிசி ஆவணப்படத்தை பார்த்த மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். மேலும், பிபிசி ஆவணப்படத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்க்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்றும் வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002ஆம் ஆண்டு பெரிய கலவரம் வெடித்தது. இதில் சிறுபான்மையினர் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரிய அளவில் விவாதத்துக்கு உள்ளானது.
இந்நிலையில், புகழ்பெற்ற ஊடக நிறுவனமான பிபிசி, குஜராத் கலவரம் பற்றிய ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் இந்த ஆவணப்படத்தை செல்போனில் பார்த்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
‛ஆங்கிலேயர் அட்ராசிட்டினு’ ஏன் படம் எடுக்கல? பிபிசி ஆவணப்படத்தால் கொதித்த கேரளா ஆளுநர்.. ஆக்ரோஷம்!
வேல்முருகன் கண்டனம்
இதனைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இங்கிலாந்தின் பிரபல தனியார் ஊடக நிறுவனமான பிபிசி, இந்தியாவில் 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பான விசாரணை நடத்தி ஆவணப்படத்தை வெளியிட்டு இருந்தது. இந்தியா- மோடிக்கான கேள்விகள் என்னும் தலைப்பில் வெளியாகி இருக்கும் இந்த ஆவணப்படத்தின் வாயிலாக, அம்பலப்பட்டு விடுவோமோ என்கிற அச்சத்தில், மோடி தலைமையிலான பாஜக அரசு, ஆவணப்படத்திற்கு தடை விதித்திருக்கிறது. குறிப்பாக, பிபிசி-யின் ஆவணப்படத்தை மத்திய பாஜக அரசு, ஐ.டி சட்டத்தின் பிரிவுகளை தவறாக பயன்படுத்தி தடை செய்துள்ளது.
குறுக்கு புத்தி
மத்திய அரசின் குறுக்கு புத்தியை கண்டிப்பதோடு மட்டுமின்றி, தடை செய்யப்பட்ட படத்தை நாடு முழுவதும் சமூக வலைதளங்கள் வழியாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், சமூக செயற்பாட்டாளர்களும், ஜனநாயக அமைப்புகளும் ஆவணப்படத்தை திரையிட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்பினர் ஆவணப்படம் திரையிட்டுள்ளனர். இதனை பொறுத்துக்கொள்ளாத பல்கலைக்கழக நிர்வாகம், ஆவணப்படம் திரையிடுவதை தடுத்துள்ளது. அதோடு, மாணவர்கள் ஆவணப்பட திரையிடல் செய்வதை காவல்துறை தடுத்ததுடன், செல்போனில் படம் பார்த்ததற்காக அவர்களை கைது செய்துள்ளது.
அடிப்படை உரிமை
ஆவணப்படம் திரையிடல் என்பது அடிப்படை உரிமையாகும். ஆனால், அந்த அடிப்படை உரிமைக்கு எதிராக, பல்கலைக்கழக நிர்வாகமும், காவல்துறையும் செயல்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. பல்கலைக்கழகம், காவல்துறையின் இத்தகைய போக்கை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. எனவே, இந்தியா-மோடிக்கான கேள்விகள்' எனும் குஜராத் படுகொலை குறித்தான பி.பி.சி ஊடக நிறுவனத்தின் ஆவணப்படத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்க்கவும், கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கவும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.
தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்
அதோடு, 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய சொந்தங்கள் படுகொலை செய்யப்பட்ட கோர நிகழ்வைப் பதிவு செய்து, அதனை தகுந்த ஆதாரங்களோடு ஆவணப்படமாக பிபிசி ஊடக நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இது வரவேற்கதக்கது. முக்கியமாக, இன்றைய தலைமுறையினரும், எதிர்கால தலைமுறையினரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெரிவித்துக்கொள்கிறது." எனக் குறிப்பிட்டுள்ளார்.