முதல்வர் Vs ஸ்டாலின்.. 2021-ல் நீயா.. நானா.. அனல் பறந்த சட்டசபை.. சவால்களும்.. பதில் சவால்களும்!
சட்டசபையில் முதல்வர் - ஸ்டாலின் காரசார மோதல் நடந்தது
சென்னை: 2021-ல் நீயா? நானா? என்ற ரேஞ்சுக்கு சட்டசபையில் விவாதம் நடந்துள்ளது... இப்படி ஒரு காரசாரமான விவாதத்தை நடத்தியது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலினும்தான்!
பொதுவாக சட்டசபை நிகழ்வு என்றால் விவாதம் நடக்கும்.. அந்த விவாதம் மான்ய கோரிக்கை மீதாக நடக்கும். பட்ஜெட் குறித்த விவாதமாகவும் இருக்கும்.. காரசார எல்லைக்கு சென்று.. அதன்பிறகு வெளிநடப்பும் நடக்கும்.. இதுதான் இயல்பு!
ஆனால் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பது யார்? என்ற விவாதம் நடந்துள்ளது.. அதுவும் முதல்வருக்கும் எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலினுக்கும் நடந்துள்ளது.. இந்த விவாதம்தான் மிகப்பெரிய ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
மானிய கோரிக்கை
மானியக் கோரிக்கை விவாதத்தில் திமுக கொறடா சக்கரபாணி எழுந்து பேசினார்.. அப்போதுதான் இந்த விவாதம் தொடங்கியது. சக்கரபாணி பேசும்போது, "2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் நீங்களே அதிமுக வெற்றிபெறுவோம் என்று சொல்கிறீர்கள்.. ஆனால் இந்த ஆட்சி மீது மக்கள் எவ்வளவு கோபத்தில் இருக்கிறார்கள் என்பது எம்பி முடிவை வைத்தே தெரியும்.. அதேபோல மேயரை தேர்ந்தெடுக்க நேரடி தேர்தல் இருந்ததை மறைமுக தேர்தல் என்று நீங்கள்தானே மாற்றினீர்கள்.. ஏன்? பயம்தானே? என்றார்.
இடைத்தேர்தல்
உடனே முதல்வர் எழுந்து பேச ஆரம்பித்தார்... "எங்களுக்கு பயமெல்லாம் ஒன்னும் கிடையாது.. எம்பி தேர்தலில் அதிக இடங்களில் நீங்க வெற்றி பெற்றீர்கள் சரி... ஆனால் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஏன் தோல்வியை தழுவினீர்கள்? மக்கள் உண்மையை புரிந்து கொண்டதால்தான் அப்போது எங்களுக்கு வெற்றியை தந்தார்கள். அதனால் எங்களுக்கு மக்களிடம் செல்வாக்கு கூடியதே தவிர குறையவில்லை" என்றார்.
திட்டங்கள்
இதை கேட்டதும் ஸ்டாலின் எழுந்து பேசினார்.. "கவர்ச்சிகரமான அறிவிப்புகளை சொல்லி எம்பி தேர்தலில் நாங்கள் வெற்றியை பெற்றுவிட்டோம் என்று நீங்கள்தான் தொடர்ந்து சொல்லி வருகிறீர்கள்... இதற்கு ஒரு விளக்கத்தை நான் அளிக்க விரும்புகிறேன்... 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும்... அதற்குபிறகு எம்பி தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகளை, மற்றும் திட்டங்களை நிறைவேற்றுவோம்" என்றார்.
நாங்குநேரி
இதற்கு முதல்வர் பதிலளிக்கும்போது, "அப்படின்னா.. 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது சொல்ல வேண்டிய வாக்குறுதிகளை எம்பி தேர்தலின்போது ஏன் சொன்னீங்க? ஆட்சியில் இல்லாதபோது நிறைவேற்ற முடியாத திட்டங்களை எப்படி சொல்ல முடியும்? விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றியை தந்தார்கள். அதனால் 2021-ம் ஆண்டு யாரை ஆட்சிக்கு கொண்டு வருவது என்று மக்கள் முடிவு செய்வார்கள்" என்றார். இப்படி ஆட்சியை பிடிப்பது தொடர்பான ஒரு விவாதம் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகிழ்ச்சி
ஆனால், இதே சட்டசபையில் இன்னொரு ஆரோக்கியமான விஷயமும் நடந்துள்ளது... கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது, பேசிய ஸ்டாலின், "கொரோனா பிரச்சினை தொடர்பான வருமுன் காப்போம் என்ற அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன்... தனியார் நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணி செய்ய ஊழியர்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என்கிற அறிவிப்பு வரவேற்கத்தக்கது..." என்று மாநில அரசுக்கு ஒரே பாராட்டு மழைதான்.. ஸ்டாலின் இப்படி பாராட்டியதும், அவருக்கு நன்றி தெரிவிப்பதாக உடனே அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.