"பாஜகவுக்கு மாற்று".. புதிய கட்சி தொடங்குகிறார் அர்ஜுன மூர்த்தி.. ரஜினி ரசிகர்களுக்கு அழைப்பு!
புதுக்கட்சி தொடங்குகிறார் அர்ஜுன மூர்த்தி
சென்னை: "புதிய சித்தாந்தத்துடன் புதிய அரசியல் கட்சியை தொடங்கவுள்ளேன்... நான் ஆரம்பிக்கப்போகும் எனது புதிய கட்சியின் கோட்பாடுகள், கொள்கைகள் நிச்சயம் பாஜகவிலிருந்து மாற்றாகவே இருக்கும்.. ரஜினி ரசிகர்கள் எனது கட்சியில் இணைந்து கொள்ளலாம்" என்று அர்ஜுன மூர்த்தி தெரிவித்துள்ளார்.
Recommended Video
ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக தெரிவித்திருந்த சமயத்தில், பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநித் தலைவர் பதவியிலிருந்து விலகி அறிவிக்கப்படாத ரஜினிகாந்தின் கட்சிக்குத் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தவர் அர்ஜுன மூர்த்தி..
ஆனால், ரஜினி அரசியலில் இருந்து ஜகா வாங்கிவிட்டதால், ரசிகர்களுடன் சேர்ந்து அதிர்ச்சி அடைந்தவர் அர்ஜுன மூர்த்தியும்தான். இந்நிலையில், நேற்று அர்ஜுன மூர்த்தி தன்னுடைய ட்விட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதில், "ரஜினி என்னை, நாட்டிற்கு அறிமுகம் செய்தது, அனைவரும் அறிந்ததே.. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பி, என்னை நாட்டிற்கு அறிமுகம் செய்தவரின் பாதம் தொட்டு வணங்கி, நான் மாற்றத்தின் வழியில் பயணித்து, நல்லதொரு மாற்றத்தை தருவேன் என நம்புகிறேன்.. ரஜினியின் ஆசீர்வாதம் மட்டும் போதும்... மாற்றத்தின் சேவகனாக விரைவில் வருவேன்.
ரஜினிகாந்தின் ஆசையை நாம் நிறைவேற்றுவோம். ரஜினியின் நல்ல எண்ணம், நல்ல மனது, தமிழகத்தின் மீது கொண்ட அக்கறை நிறைவேறும் என நம்புங்கள்... ரஜினிகாந்த் எனது தலைவர் என்பதைவிட, நானும் ஒரு ரஜினி ரசிகர் என்பதில் பெருமைகொள்கிறேன். ரசிகன் என்ற அக்கறையில் ரஜினியின் புகழுக்கு எந்தவித கெட்ட பெயரும் ஏற்படுத்தமாட்டோம்" என்று தெரிவித்திருந்தார்.
எதற்காக அந்த திடீர் அறிக்கை? அர்ஜுன மூர்த்தி என்ன சொல்ல வருகிறார்? என குழப்பம் உடனடியாக ஏற்பட்டது.. இதையடுத்து, அவரே ஒரு கட்சியை தொடங்க போவதாக அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுனமூர்த்தி, "புதிய சித்தாந்தத்துடன் புதிய அரசியல் கட்சியை தொடங்கவுள்ளேன்... நான் ஆரம்பிக்கப்போகும் எனது புதிய கட்சியின் கோட்பாடுகள், கொள்கைகள் நிச்சயம் பாஜகவிலிருந்து மாற்றாகவே இருக்கும். ரஜினி ரசிகர்கள் எனது கட்சியில் இணைந்து கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, புதிய அரசியல் கட்சி குறித்து அர்ஜுன மூர்த்தி முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பானது தமிழக அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை உண்டு பண்ணி வருகிறது.