இன்னும் விலகாத ஜெ. மரணத்தில் மர்மம்.. சசிகலா, பீலேவிடம் விசாரணை இல்லையாம்.. ஆறுமுகசாமி ஆணையம்
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, லண்டன் மருத்துவர் பீலேவிடம் விசாரணை இல்லை என ஆறுமுகசாமி ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நிலை குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 75 நாட்கள் சிகிச்சை பெற்ற அவர் டிசம்பர் 5-ஆம் தேதி காலமானார்.
இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த சர்ச்சையை அடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் கமிஷனை தமிழக அரசு அமைத்தது. இந்த ஆணையம் கடந்த 2017-ஆம் ஆண்டு விசாரணையை தொடங்கியது.
பலதரப்பு
இந்த ஆணையம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், நெருக்கமானவர்கள், அமைச்சர்கள், சுகாதாரத் துறை செயலாளர், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர், அப்பல்லோ மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் என பலதரப்பினரிடம் விசாரணை நடத்தி வருகிறது.
விடை கிடைக்காத கேள்விகள்
ஆணையம் விசாரித்த நபர்களிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணையும் நடத்தி வருகிறது. 100-க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஜெயலலிதாவை மேல் சிகிச்சைக்கு வெளிநாட்டிற்கு அழைத்து செல்லாமல் தடுத்தது யார், அவர் ஆஞ்சியோ சிகிச்சைக்கு சம்மதித்த நிலையில் கடைசி வரை செய்யாதது ஏன்,நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவிற்கு இனிப்பு வகை உணவை பரிமாற சொன்னது யார், அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் சிசிடிவி கேமரா பதிவை ஆப் செய்ய சொன்னது யார் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு இன்று வரை விடைகிடைக்கவில்லை.
மருத்துவர் குழு
இதனால் அவரது மரணத்தில் இன்னும் மர்மம் நீடித்து வருகிறது. மேலும் அப்போலோ மருத்துவர்களிடம் மறு விசாரணை நடத்தும் வகையில் ஆணையம் சார்பில் மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மீதான உத்தரவு அடுத்த வாரத்தில் நீதிபதி பிறப்பிக்கவுள்ளார்.
கோரிக்கை
இதற்கிடையே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் விசாரணையை முடித்துக் கொள்ள ஆணைய தரப்பு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் சசிகலா, லண்டன் டாக்டர் பீலே ஆகியோரிடம் விசாரணை நடத்தும் முடிவை ஆணையம் கைவிடுகிறது. எனினும் சசிகலா, பீலே, தமிழக அமைச்சர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்த சசிகலா தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அறிக்கை தாக்கல் செய்ய முடிவு
கடந்த 9-ஆம் தேதி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்திருந்த நிலையில் அதை கைவிட்டது. ஏற்கெனவே 3 முறை பதவி காலத்தை நீடிக்க மனு தாக்கல் செய்த நிலையில் வரும் பிப்ரவரி 24-ஆம் தேதிக்குள் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது.