பெங்களூர் செல்ல ஆறுமுகசாமி ஆணையம் முடிவு.. சசிகலாவை விசாரிக்க!
சசிகலாவிடம் வாக்குமூலம் பெற ஆறுமுக சாமி ஆணையம் முடிவு செய்துள்ளது.
சென்னை: ஒருவழியாக சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துவிட்டது. இதையடுத்து ஜெ. மரணம் சம்பந்தமாக நிறைய விஷயங்கள் வெளியே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு விட்டது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிலிருந்து, பாதுகாப்பு அதிகாரிகளிலிருந்து ஒருவரையும் விடாமல் இந்த விசாரணை நடந்தது.
அப்போது சசிகலா சொந்தக்காரர்களிடம் ஜெயலலிதா மரணம் சம்பந்தமான கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் சசிகலா சிறையில் இருப்பதால் ஆணையத்தில் அவரால் நேரில் ஆஜராக வாக்குமூலம் அளிக்க முடியவில்லை. அதற்கு பதிலாக பிரமாண பத்திரம்தான் தாக்கல் செய்திருந்தார்.
விசாரணை நடத்த முடிவு
வருகிற 10-ம் தேதிக்குள் இந்த வழக்கின் விசாரணையை முடித்துவிட வேண்டும் என்று ஆணையம் முடிவு செய்துள்ளது. எனவே இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளதால் சசிகலாவிடம் மீண்டும் விசாரணை நடத்துவது உறுதியாகி உள்ளது.
குழப்பம் நீடித்தது
ஆனால் எந்த வகையில் சசிகலாவிடம் விசாரணை நடத்து என்பதுதான் இதுவரை யோசனையாக இருந்தது. ஏனென்றால், ஏற்கனவே வீடியோ கான்பரஸ் மூலம் விசாரணை நடத்தலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால் ஜெயிலுக்குள் அதற்கான வசதி இல்லாததால் அந்த முயற்சி கைவிடப்பட்டு விட்டது. அதனால் பரோல் அளிக்கப்பட்டு சசிகலா சென்னை வரவழைக்கப்படுவாரா? அல்லது அதிகாரிகளே ஜெயிலுக்குள் போய் விசாரணையை நடத்துவார்களா என்பதில் குழப்பம் நீடித்து வந்தது.
அனுமதி கோரி கடிதம்
தற்போது சிறையில் உள்ள சசிகலாவிடம் நேரில் போய் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், சிறைச்சாலையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்துவதற்கு அனுமதி கோரி கடிதம் ஒன்றை எழுதி உள்ளது.
பல தகவல்கள்
இதேபோல் தமிழக உள்துறைக்கும் விசாரணை ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது. சசிகலாவை சிறையில் விசாரிக்க அனுமதி பெற்றுத்தரக் கோரியும், அனுமதி வழங்கக் கோரியும் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் நிழல் போல இருந்தவர் சசிகலா. ஜெயலலிதாவின் கடைசி நாட்களில் அவருடன் இருந்தவர் இவர் மட்டுமே.. எனவே சசிகலாவிடம் விசாரணை நடத்தினால் ஏதாவது தகவல்கள் வெளியே வரும் என்று எதிர்பார்ப்பு உள்ளது.