நன்றிங்க.. பாடப்புத்தகத்தில் தனது கண்டுபிடிப்பை சேர்த்தது குறித்து 'பேட்மேன்' முருகானந்தம் மகிழ்ச்சி
சென்னை: பனிரெண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தனது கண்டுபிடிப்பை சேர்த்த தமிழக அரசுக்கு அருணாச்சலம் முருகானந்தம் நன்றி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் வடவள்ளியைச் சேர்ந்தவர், அருணாசலம் முருகானந்தம். மாதவிலக்கு நேரங்களில் தமிழக ஏழைப் பெண்கள் குறைந்த செலவில் நாப்கின்களை பயன்படுத்தும் வகையில் மெஷின் ஒன்றைக் கண்டுபிடித்து சாதனைப் புரிந்தவர்.
அவரது சாதனையைப் பாராட்டிய மத்திய அரசு 'பத்மஸ்ரீ' விருது கொடுத்து கெளரவித்தது. இவரது கண்டுபிடிப்பையும் வாழ்க்கை முறையையும் வைத்து இந்தி மொழியில் பேட் மேன் என்ற படம் வெளியானது.
கவுரவித்த தமிழக அரசு
அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான இந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தமிழக அரசும் அருணாச்சலம் முருகானந்தத்தின் கண்டுபிடிப்பை பாடப்புத்தகத்தில் இடம்பெற செய்து அவரை கவுரவித்துள்ளது.
தமிழக அரசுக்கு நன்றி
பனிரெண்டாம் வகுப்பு உயிர் விலங்கியல் பாடத்தில் அருணாச்சலம் முருகானந்தத்தின் கண்டுபிடிப்பு குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பாக பேசிய முருகானந்தம், பாடப்புத்தகத்தில் தனது கண்டுபிடிப்பு குறித்து சேர்த்த தமிழ்நாடு அரசிற்கு நன்றி தெரிவித்தார்.
மாணவர்களிடம் ஆர்வம் அதிகரிக்கும்
பாடப்புத்தகங்களில் வெளிநாட்டு அறிஞர்களின் கண்டுபிடிப்புகள் மட்டுமே இடம்பெற்று வந்தது. கண்டுபிடிப்பு என்றாலேதாமஸ் ஆல்வா எடிசன்,ஐன்ஸ்டீன் பெயர்கள்தான் இடம்பெறும் என்ற நிலையில், தனது கண்டுபிடிப்பு இடம்பெற்றிருப்பது கிராமப்புற மாணவர்களிடம் புதிய கண்டுபிடிப்புகள் குறித்த ஆர்வம் உருவாக வாய்ப்பாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.
பெண்கள் மீதான மதிப்பு உயரும்
படிப்பு என்பது வேலை தேடுவது என்பதற்கு பதிலாக வேலை கொடுப்பவர்களாக மாற்றும் எனவும் அவர் கூறினார். மேலும் மாதவிலக்கு காலத்தில், பெண்கள் படும் துயரங்களை, மாணவர்கள் அறியவும், அதன் மூலம், பெண்களின் மீதான மதிப்பு உயரும் என்றும் அருணாச்சலம் முருகானந்தம் கூறினார்.