அந்த வேதனை இருக்கே அந்த வேதனை.. மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் தவிக்கும் தமிழக காங்.!
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்றதால் தமிழக காங்கிரஸ் கட்சி வித்தியாசமான சிக்கல் ஒன்றில் மாட்டி இருக்கிறது.
Recommended Video
சென்னை: டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்றதால் தமிழக காங்கிரஸ் கட்சி வித்தியாசமான சிக்கல் ஒன்றில் மாட்டி இருக்கிறது. இந்த தேர்தல் முடிவை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் கட்சி புலம்பி வருகிறது.
டெல்லி தேர்தல் ஒருவழியாக நடந்து முடிந்து, முடிவும் வெளியாகிவிட்டது. டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 62 இடங்களை கைப்பற்றி அபார வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. பாஜக 8 இடங்களில் வென்றது.
இதையடுத்து இன்று காலை டெல்லி துணை நிலை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிப்.16-ல் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கிறார்.
முக்கிய காரணம்
டெல்லியில் ஆம் ஆத்மி பெற்ற இந்த வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர் மிக முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதங்களில் எப்படி பிரச்சாரம் செய்ய வேண்டும். என்ன மாதிரியான கருத்துக்களை பதிவிட வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சிக்கு இவர்தான் ஆலோசனை வழங்கினார். பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனம்தான் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் ஆலோசனை நிறுவனமாக இருந்தது. இதனால் ஆம் ஆத்மி மாஸ் வெற்றியும் பெற்றது.
டெல்லி காங்கிரஸ்
இது டெல்லி காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. டெல்லியில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. காங்கிரஸ் கட்சியின் இந்த மோசமான தோல்விக்கு பிரசாந்த் கிஷோரும் ஒரு காரணம். ஆம் ஆத்மி முதலில் டெல்லியில் காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கவே திட்டமிட்டது. லோக்சபா தேர்தலிலும் கூட ஆம் ஆத்மி காங்கிரஸ் உடன் கூட்டணி சேர வெளிப்படையாக முயன்று தோல்வி அடைந்தது.
வெற்றி
ஆம் ஆத்மி கட்சிக்குள், பிரசாந்த் கிஷோர் ஆலோசகராக வந்த பின்தான் அக்கட்சி காங்கிரஸ் உடன் பேசுவதை நிறுத்தியது. காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லாமலேயே பெரிய அளவில் வெற்றிபெறலாம் என்று பிகேதான் ஆம் ஆத்மிக்கு ஐடியா கொடுத்தது. அதேபோல் தேர்தல் பிரச்சாரத்திலும் ஆம் ஆத்மி காங்கிரசை கண்டுகொள்ளவே இல்லை. காங்கிரஸ் பற்றி பேசினால் வாக்கு சிதறும் என்று ஆம் ஆத்மி காங்கிரஸ் குறித்து எதுவும் பேசவில்லை.
திமுக
இதனால் டெல்லியில் போட்டி பாஜக vs ஆம் ஆத்மி என்று மாறியது. இதனால் டெல்லியில் காங்கிரஸ் மொத்தமாக துடைத்து எறியப்பட்டது. டெல்லியில் இப்படி காங்கிரஸ் கட்சியை மொத்தமாக துடைத்து எரிய மூளையாக செயல்பட்ட அதே பிரசாந்த் கிஷோர்தான் தமிழகத்தில் திமுகவிற்கு தேர்தல் ஆலோசனை வழங்குகிறார். தமிழகத்தில் திமுகவுடன் இதற்கான ஒப்பந்தம் ஏற்கனவே போடப்பட்டுவிட்டது.
காங்கிரஸ் கூட்டணி
தமிழகத்தில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருக்கிறது. டெல்லியில் காங்கிரசை காலி செய்த பிரசாந்த் தமிழகத்தில் அதே காங்கிரஸ் கட்சிக்காக வேலை செய்வாரா என்று கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே உத்தர பிரதேசத்திலும், பஞ்சாப்பிலும் காங்கிரஸ் கட்சிக்கு பிரசாந்த் கிஷோர் தேர்தல் பணிகளை கவனித்தவர்தான். அதனால் தமிழகத்தில் காங்கிரஸ் உடன் பணியாற்றுவது பிரசாந்த் கிஷோருக்கு பெரிய சிக்கலாக இருக்காது.
யாருடைய ஆதரவு
ஆனால் தமிழக காங்கிரஸ் தற்போது ப. சிதம்பரம் ஆதரவு குழுவால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரியே ப. சிதம்பரம் டீம்தான். ப. சிதம்பரம் - பிரசாந்த் கிஷோர் இடையே அவ்வளவு நெருக்கமான உறவு கிடையாது. டெல்லி தேர்தல் இந்த உறவில் இன்னும் விரிசலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பிரசாந்த் கிஷோரின் தமிழக வருகையை தமிழக காங்கிரஸ் எப்படி எதிர்கொள்ளும் என்று கேள்வி எழுந்துள்ளது.
என்ன குழப்பம்
இதனால்தான் டெல்லி தேர்தல் வெற்றி குறித்து கே.எஸ் அழகிரி பெரிதாக எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. ஆம் ஆத்மியை பாராட்டினால், டெல்லி காங்கிரசை பகைக்க வேண்டி இருக்கும். பாராட்டவில்லை என்றால், பிரசாந்த் கிசோரின் மனஸ்தாபத்தை சம்பாதிக்க வேண்டி இருக்கும். பிரசாந்த் கிஷோர்தான் 2021 தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு திமுக எவ்வளவு இடம் ஒதுக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பிரசாந்த் கிஷோரை தற்போது பாராட்டவும் முடியாமல், பகைக்கவும் முடியாமல் தமிழக காங்கிரஸ் குழம்பி வருகிறது.