அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்.. ஏப்ரல் 14-க்கு பிறகும் தமிழகத்தில் 144 தடை நீட்டிக்கப்படுமா?
சென்னை: தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் ஏப்ரல் 14-ஆம் தேதிக்கு பிறகும் 144 தடை நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் கொரோனாவால் 571 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வரை 5 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பலியாகிவிட்டனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 2 பேர் பலியாகிவிட்டனர்.
இந்த 86 பேரில் 85 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். இந்த நிலையில் நேற்றைய தினம் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.
கொரோனா பீதி.. மளிகைப் பொருட்கள் வரத்து இல்லை.. வியாபாரிகள் தகவல்.. விலை கடுமையாக உயரும் அபாயம்
2ஆவது நிலை
அப்போது அவர் கூறுகையில் கோவிட் 19 பாதிப்பில் தமிழகம் 2-ஆவது நிலையில் உள்ளது. கொரோனா நோய் சோதனை செய்யும் கருவிகள் போதுமானதாக உள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பரிசோதனை வசதிகள் ஏற்படுத்த அரசு முழு வீச்சில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற நாடுகளில் கொரோனா எப்படி வேகமாக பரவியது என்பது குறித்து நமது நிபுணர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். மிகவும் மோசமான நிலை ஏற்பட்டால் அதை எப்படி கையாள்வது என்பது குறித்தும் ஆராய்ந்து வருகிறார்கள் என்றார்.
நீட்டிக்க வாய்ப்பு
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தற்போது அமலில் உள்ள 144 தடையுத்தரவு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில் 144 தடையுத்தரவை வரும் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து அரசு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
சமூகப் பரவல்
ஒரு வேளை தமிழகத்தில் கொரோனாவின் சமூகப் பரவலை தடுக்க வேண்டும் என அரசு இதுபோன்ற கால நீட்டிப்பை செய்ய முற்பட்டால் ஏற்கெனவே 21 நாட்கள் ஊரடங்கில் பாதிப்பை சந்தித்துள்ள தொழிலாளர்கள், ஏழை மக்களின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஏதேனும் வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கடுமை
மத்திய அரசும் கொரோனா நோய் கட்டுப்பாட்டு திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி கொரோனா பாதித்த பகுதிகளை சுற்றி வளைத்து சீல் வைக்க திட்டமிட்டுள்ளது. அதுபோல் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதை கடுமையாக்கவும் மத்திய அரசு முயற்சித்து வருகிறது.