ஒரு வாரமாக ஒரு பைசா கூட... உயராத பெட்ரோல் டீசல் விலை... காரணம் இதுதான்!
சென்னை: ஐந்து மாநில தேர்தல்கள் நெருங்கும் நிலையில், ஏழாவது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றும் ஏற்படவில்லை.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று 93.11 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல டீசல் ஒரு லிட்டருக்கு 86.45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 91.17 ரூபாய்க்கும் டீசல் ஒரு லிட்டர் 81.47 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், லாரி உரிமையாளர்கள் தங்கள் வாடகையை உயத்தியுள்ளனர். இது மற்ற பொருட்களின் விலைகளும் விரைவில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சதமடித்த பெட்ரோல்
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் காரணமாகக் கடந்த பிப்ரவரி மாதம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்தது. இந்தியாவில் எரிபொருள்கள் மீது மத்திய அரசு கலால் வரி விதிக்கிறது.அதேபோல மாநில அரசுகளும் வாட் விதிக்கிறது. இது ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும். இதனால் நாட்டின் சில பகுதிகளில் பெட்ரோல் விலை ரூ.100ஐயும் தாண்டியது.
கலால் வரி
எரிபொருள் விலையேற்றம் என்பது அத்தியாவசிய பொருட்களின் விலையையும் பாதிக்கும் என்பதால் இது நடுத்தரவர்க்கத்தினருக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் பொதுமக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு தனது கலால் வரியைக் குறைக்க வேண்டும் எனக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
தேர்தல் அறிவிப்பு
இந்நிலையில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. கடந்த ஒரு வாரமாகச் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 93.11 ரூபாய்க்கும், டீசல் 86.45 ரூபாய்க்குமே விற்பனை செய்யப்படுகிறது.
மாற்றம் இல்லை
பொதுவாகச் சர்வதேச அளவில் கச்ச எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்தே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றியமைக்கப்படுகிறது. ஆனால், எப்போதெல்லாம் நாட்டில் தேர்தல்கள் நடைபெறுகிறதோ, அப்போதெல்லாம் பெட்ரோல், டீசல் விலையேற்றம் இல்லை என்பது அறிவிக்கப்படாத விதியாகவே தொடர்கிறது.