"அந்த திட்டம்தான் அவருக்கும் இருந்தது".. காலியாகும் மநீம கூடாரம்.. கமலின் அடுத்த பிளான்தான் என்ன?
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அடுத்தடுத்து முக்கியமான நிர்வாகிகள் எல்லோரும் வெளியேறி வரும் நிலையில், அதன் தலைவர் கமல்ஹாசன் என்ன செய்ய போகிறார்? அவரின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை என்றாலும் கூட சில தொகுதிகளில் கவனிக்கத்தக்க வகையில் வாக்குகளை பெற்றது. முக்கியமாக கொங்கு மாவட்டங்களில் மக்கள் நீதி மய்யத்தின் வாக்கு சதவிகிதம் நன்றாகவே இருந்தது.
ஆனால் தேர்தல் தோல்விக்கு பின் ஒரே வாரத்தில் வரிசையாக மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி வருகிறார்கள். கமலுக்கு அடுத்து முக்கிய தலைவர்களாக கருதப்பட்ட பலர் வரிசையாக கட்சியை விட்டு வெளியேறி வருகிறார்கள்.
வெளியேற்றம்
மக்கள் நீதி மய்யத்தில் இருந்து துணைத் தலைவர் மருத்துவர் மகேந்திரன், பொன்ராஜ், மற்ற சி.கே.குமரவேல், மௌரியா,பொறுப்பாளர்கள், சந்தோஷ்பாபு, முருகானந்தம் ஆகியோர் வெளியேறி உள்ளனர். கட்சியில் ஜனநாயகம் இல்லை. அதனால் வெளியேறுகிறோம் என்று கூறி வரிசையாக நிர்வாகிகள் வெளியேறி வருகிறார்கள்.
இன்று
இன்றும் கூட கட்சியில் இருந்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு, பத்ம ப்ரியா ஆகியோரும் வெளியேறிவிட்டனர். இப்படி மூத்த நிர்வாகிகள் பலர் கட்சியில் இருந்து வெளியேறுவார்கள் என்பது கமலுக்கு ஏற்கனவே தெரியும் என்றுதான் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை கமல் ஏற்கனவே கணித்துதான் இருந்தார் என்கிறார்கள்.
திட்டம்
மநீமவில் தேர்தலுக்கு பின் நிறைய மாற்றங்களை கொண்டு வரும் முடிவில் கமல் இருந்தார். மூத்த நிர்வாகிகளை நீக்கும் திட்டம்தான் அவருக்கும் இருந்தது. கட்சிக்குள் புதிய நபர்களை கொண்டு வரும் முடிவில், முக்கியமாக வேறு கட்சியில் உள்ள சிலரை இழுக்கும் திட்டத்தில் கமல்ஹாசன் இருந்தார். தற்போது கமல் நடவடிக்கை எடுக்கும் முன்பே வரிசையாக பலர் வெளியேறிவிட்டனர் என்று கட்சி தலைமைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
களையெடுப்பு
இதைதான் மகேந்திரன் வெளியேறிய பின் களையெடுப்பு நடக்கும் என்று கமல்ஹாசன் மறைமுகமாக குறிப்பிட்டார் என்கிறார்கள். இன்று 2 பேர் வெளியேறியது மட்டும் முடிவு இல்லை, இன்னும் சில முக்கிய புள்ளிகள் வெளியேற போகிறார்கள், கமலுக்கு நெருக்கமாக பார்க்கப்படும் சிலரும் கட்சியில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறுகிறார்கள்.
கமல் திட்டம்
மொத்தமாக கட்சியில் மாற்றத்தை கொண்டு வரும் முடிவில் கமல் இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் மநீம சென்னை வட்டாரத்தில் விசாரித்ததில்.. இவர்களின் வெளியேற்றம் காரணமாக கமல் அதிர்ச்சி அடையவில்லை. இது எதிர்பார்த்ததுதான், கட்சியை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று கமலுக்கு தெரியும் என்றும் கூறுகிறார்கள். ஆனால் மநீம நிர்வாகிகள் சிலர் நம்பிக்கையாக இருந்தாலும், மநீம கட்சிக்கு அடுத்த சில மாதங்கள் சவாலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
சவால்
கமல் இனி சில மாதங்கள் படங்களில் நடிக்க உள்ளார். ஏற்கனவே கையெழுத்து போட்ட படங்களை முடிப்பார். அதன்பின் பிக்பாஸ் ஷூட்டிங் நடக்க உள்ளது. எனவே இந்த வருடம் முழுக்க கமல் கொஞ்சம் அரசியல் இல்லாத மற்ற விஷயங்களில் பிஸியாகிவிடுவார் என்கிறார்கள். இதனால் இந்த வருடம் கட்சியில் பலர் இப்படி வெளியாக வாய்ப்பு உள்ளது.
மாற்றம்
அதற்கு முன்பாக கமல் புதிய நிர்வாகிகளை கட்சிக்குள் கொண்டு வர வேண்டும். முக்கியமாக பிற கட்சியில் இருக்கும் அனுபவ மிக்க நபர்களை கமல் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும். கமலுக்கு இப்போது தேவை எல்லாம் அரசியல் அனுபவம் மிக்க விசுவாசமான தலைவர்கள்தான். அப்படிப்பட்ட நபர்களை கமல் உடனே கட்சிக்குள் கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.