கடைசியில் அஸ்திவாரத்திலேயே கை வைத்த பாஜக.. சுதாரிக்குமா அதிமுக தலைமை!
சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் பாஜகவினர் எம்ஜிஆருக்கு காவிசாயம் பூசி விளம்பரம் வெளியிட்டுள்ளனர். கூட்டணி கட்சியாக இருந்தாலும் பாஜகவின் இந்த செயலை கண்டு அதிமுகவினர் கொதித்து போய் உள்ளனர். இந்த விவாகரத்தில் அதிமுக தலைமை சுதாரிக்குமா அல்லது அமைதியாக கடந்துவிடுமா என்பது இனி தான் தெரியும்.
அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்று இருந்தாலும், அதிமுகவை பல்வேறு வகையில் சீண்டி வருகிறது, மிக முக்கியமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக இதுவரை ஏற்கவில்லை, அதுபற்றி டெல்லி மேலிடம் தான் முடிவு செய்யும் என்று தமிழக பாஜக தலைவர்கள் அவ்வப்போது சொல்லி வருகிறார்கள்.
பாஜகவினரின் இந்த செயலால் அதிமுக தலைமை கோபம் அடைந்தாலும் இதுவரை வெளிப்படையாக பாஜகவை கண்டிக்கவில்லை. அதேநேரம் அதிமுகவின் அடிமண்ட தொண்டர்கள் பாஜகவை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
பதறும் எடப்பாடியார்.. துடிக்கும் ஸ்டாலின்.. வேடிக்கை பார்க்கும் பாஜக.. இனி அடுத்து என்ன நடக்கும்?
பாஜக பிரச்சாரத்தில் எம்ஜிஆர் படம்
இந்நிலையில் அதிமுகவை நிறுவிய மறைந்த முன்னாள் முதல்வரும், புரட்சி தலைவருமான எம்ஜிஆரின் புகைப்படத்தை பாஜக தேர்தல் சின்னமான தாமரை மற்றும் காவி கலருடன் இணைந்து பயன்படுத்தி இருப்பது அதிமுக நிர்வாகிகளிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
எம்ஜிஆராக மோடி
பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வெற்றிவேல் யாத்திரை தொடர்பாக வீடியோடிவில், எம்ஜிஆர் படம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. அதில் பொன்மனச் செம்மலின் அம்சமாக மோடியை கண்டோமோடா என்ற வரிகள் ஒலிக்க, பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. இதுதான் அதிமுகவின் அடிமண்ட தொண்டர்களை காண்டாக்கி உள்ளது.
மோடி வெளியிட்ட அறிவிப்பு
ஏற்கனவே கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போதே, அதிமுகவில் உள்ள எம்ஜிஆர் ரசிகர்களின் வாக்குகளை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை பிரதமர் மோடி வெளியிட்டார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ரயில் நிலையம்' என்று அழைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். பிரச்சாரங்களில் எம்ஜிஆரை வெகுவாக புகழ்ந்தார்.. இந்த நிலையில், தற்போது சட்டமன்ற தேர்தலின்போதும் அதிமுகவில் உள்ள எம்ஜிஆரின் வாக்குகளை கவரும் நோக்கில் எம்ஜிஆர் புகைப்படத்துடன் தேர்தல் பிரசாரத்தை பாஜக முன்னெடுத்துள்ளது. அதுவும் எப்படி மோடியை எம்ஜிஆராக உருவகப்படுத்தி பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.
அதிமுக எதிர்ப்பு
பாஜகவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன், அனைத்து மக்களும் எம்.ஜி,ஆரை போற்றுவார்கள். ஆனால் பிற கட்சிகள் எம்.ஜி.ஆர். புகைப்படத்தை பயன்படுத்தக்கூடாது என்றார். எனினும் அதிமுக மேலிடத்தில் இருந்து எதிர்ப்போ பதிலோஇதுவரை வரவில்லை. மோடியை எம்ஜிஆர் என்று கூறி அதிமுக வாக்கு சேகரிப்பதை தடுக்கவோ, எதிர்க்கவோ முடியாத நிலையில் அதிமுக தலைமை இருக்கிறதா என்று கேள்வி எழுகிறது.
தட்டிப்பறித்துவிட்டதா
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இந்த விவகாரம் குறித்து பேசுகையில். ஆட்சியில் நீடிப்பதற்காக பாஜகவிடம் பவ்வியம் காட்டும் அதிமுக தற்போது எம்.ஜி,.ஆரையும் விட்டுக்கொடுத்து விட்டதா அல்லது எம்.ஜி.ஆரையும் பாஜக தட்டிப்பறித்து விட்டதா என கேள்வி எழுப்பினார்.
முருகன் அளித்த விளக்கம்
இந்த சர்ச்சைகளுக்கு பதில் அளித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், எம்.ஜி.ஆரை போன்று நல்லது செய்து மக்களிடம் பிரதமர் மோடி ஆதரவு பெற்று வருகிறார், அதை உணர்த்தவே எம்ஜிஆர் படத்தை பயன்படுத்தி இருக்கிறோம் என்றார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பாஜகவின் செயலை கண்டு அதிமுக தலைமை சுதாரித்தால் நல்லது என்று அதிமுகவின் அடிமட்ட நிர்வாகிகள் வேதனை தெரிவித்தனர்.