மீண்டும் ஊழியர்களுக்கு வேலையில்லா நாட்கள்.. அசோக் லேலண்ட் முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னை எண்ணூரில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மீண்டும் ஐந்து நாட்களை வேலையில்லா நாட்களாக அறிவித்துள்ளது. இந்த மாத இறுதியில் இரண்டு நாளும், அக்டோபர் மாதத்தின் முதல் இரண்டு வாரத்தில் மூன்று நாட்களையும் வேலையில்லாத நாள் ஆக அறிவித்துள்ளது.
பொருளாதார மந்த நிலை காரணமாக வாகன உற்பத்தி மற்றும் விற்பனை துறை நாட்டில் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது.
இதன் காரணமாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஆர்டர்கள் இல்லாமல் தவிக்கின்றன. இதனால் பல லட்சம் பேர் வேலையை இழந்து தவித்து வருகிறார்கள்.
70 சதவீதம் உற்பத்தி பாதிப்பு
இந்த பிரச்சனை சிறிய நிறுவனங்களை மட்டுமல்ல பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான அசோக் லேலண்ட் நிறுவனத்தையும் விட்டுவைக்கவில்லை. அந்த நிறவனத்தின் வாகன உற்பத்தி கடந்த ஆகஸ்ட் மாதம் 70 சதவீதம் குறைந்து போனது.
கடந்த மாதம் கடும் பாதிப்பு
கடந்த மாதம் 12 நாட்களை சென்னை எண்ணூர் அசோக் லேலண்ட் நிறுவனம் வேலையில்லாத நாளாக அறிவித்து உற்பத்தியை நிறுத்தியது. இதன் காரணமாக ஊழியர்கள் யாரும் வேலைக்கு செல்லவில்லை. அவர்கள் வேலையில்லாமல் தவித்தனர் .
அசோக் லேலண்ட் அறிவிப்பு
இந்நிலையில் அசோக் லேலண்ட் நிறுவனம் மீண்டும் ஐந்து நாட்களை தனது ஊழியர்களுக்கு வேலையில்லாத நாளாக அறிவித்துள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, "வாகன விற்பனையில் மந்தநிலை தொடர்ந்து வருவதன் காரணமாக நிறுவனத்தின் நலனுக்காக சில முடிவுகளை நிறுவனம் எடுத்திருக்கிறது. இதன்படி செப்டம்பர் 28ம் தேதி மற்றும் செப்டம்பர் 30ம் தேதி மற்றும் அக்டோபர் 1ம் தேதி மற்றும் அக்டோபர் 8ம் தேதி மற்றும் அக்டோபர் 9ம் தேதி ஆகிய நாட்கள் வேலையில்லாத நாட்கள் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது
அசோக் லேலண்ட் விளக்கம்
மேற்கண்ட ஐந்து நாட்கள் ஊழியர்கள் யாரும் பணிக்கு வர வேண்டாம். இதில் செப்டம்பர் 28ம் தேதி மற்றும் அக்டோபர் 1ம் தேதி மற்றும் அக்டோபர் 8ம் தேதி மற்றும் அக்டோபர் 9ம் தேதி ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பாக ஊழியர் சங்கமான ஏஎல்இசியு உடன் கலந்து ஆலோசித்த பிறகு அறிவிக்கப்படும். வேலை இல்லாத நாளான செப்டம்பர் 30ம் தேதிக்கு மட்டும் செப்டம்பர் மாதத்திற்கான ஊதியத்துடன் வழங்கப்படும் " இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அசோக் லேலண்ட் நிறுவனத்தின் ஏஜிஎம் ரமேஷ் குமார் வெளியிட்டுள்ளார்.