சட்டசபைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: ரூ.50000 வரை ரொக்கம் கொண்டு போகலாம் - புகாருக்கு 1950
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளதை அடுத்து தமிழகத்தில் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
சென்னை: தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே ரொக்கமாக எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகம் புதுச்சேரி கேரளா மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் தேதி தொடர்பன அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து, இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
தமிழக அரசியல் கட்சியினரும் மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்த சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மே 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக கூறினார். தமிழகத்தில் 8,000 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு உள்ளன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த முறைகேடும் செய்ய முடியாது என்று கூறினார். பணப்பட்டுவாடா தொடர்பாக 1950 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றம் குறித்து ஆய்வு செய்யப்படும். 50,000 ரூபாய்க்கு அதிகமாக பணம் வைத்திருந்தால் ஆவணங்கள் காண்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தமிழக தேர்தல் முடிவுகள்... ஒரு மாதம் கேப்.. கட்சிகளின் நிம்மதியை இப்போதே கலைத்த தேர்தல் ஆணையம்
பணப்பட்டுவாடா புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மாவட்ட மண்டல அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், செலவின குழுவினருக்கான பயிற்சி மார்ச்சில் தொடங்குகிறது என தெரிவித்தார். தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை அடுத்து அரசு அலுவலகங்களில் இருந்த அரசு விளம்பரங்கள் மறைக்கப்பட்டன.
அரசு, அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், ஆசிரியர்கள், சீருடை பணியாளர்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவன ஆசிரியர்கள் உள்பட அனைவரும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். தேர்தல் முடியும் வரை ஆளும் அரசு, புதிய நலத் திட்டங்களை அறிவிக்கக் கூடாது. அரசு ஊழியர்களை பணியிட மாற்றம் செய்யக் கூடாது. பதவி உயர்வும் வழங்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.