ராஜபாளையம் தொகுதி யாருக்கு? நடிகை கெளதமியுடன் மல்லுக்கட்டும் ராஜேந்திர பாலாஜி
சென்னை: ராஜபாளையம் சட்டசபை தொகுதியை பெறுவதில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் பாஜக நடிகை கெளதமி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
நுரையீரல் முதல் கருப்பை புற்றுநோய் வரை.. ஆரம்பத்தில் தடுப்பது எப்படி.. அறிகுறிகள் என்ன.. Dr ஒய் தீபா
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. மே 2-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மார்ச் 12-ந் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது.
தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை
இதனையடுத்து தமிழக தேர்தல் களம் படுசுறுசுறுப்பாக இருக்கிறது. அரசியல் கட்சிகளின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சிவகாசி வேண்டாம்
அதிமுகவைப் பொறுத்தவரையில் கட்சி இமேஜை காப்பாற்றுவதற்காக அமைச்சர்கள் அனைவரும் கடந்த முறை வென்ற தொகுதியில்தான் போட்டியிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியோ தாம் சிவகாசி தொகுதியை விட்டு ராஜபாளையத்தில்தான் போட்டியிடுவேன் என தீவிரம் காட்டுகிறார்.
பாஜக கெளதமி
அதேநேரத்தில் பாஜகவில் சேர்ந்த நடிகை கெளதமி, ராஜபாளையத்திலேயே முகாமிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டும் பிரசாரம் செய்தும் கொண்டிருக்கிறார். ராஜபாளையத்தில் பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தையும் நடத்தியது. அந்த கூட்டத்தில் பாஜக மேலிட தேர்தல் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பங்கேற்று பேசுகையில் நடிகை கெளதமி ராஜபாளையம் தொகுதியில்தான் போட்டியிடுவார் என கூறியிருந்தார்.
அதிமுக தலைமை அதிருப்தி
தற்போது ராஜபாளையம் தொகுதிக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறிவைத்துக் கொண்டிருப்பதை அதிமுக தலைமை ரசிக்கவில்லையாம். ஏற்கனவே அறிவுறுத்தியபடி அமைச்சர்கள் சொந்த தொகுதியில்தான் நிற்க வேண்டும் என்பதில் அதிமுக தலைமை உறுதியாக உள்ளதாம். இதனால் திக்கு தெரியாத திசையில் விழிபிதுங்குகிறாராம் ராஜேந்திர பாலாஜி.