வலுக்கும் திமுக செல்வாக்கு.. வேகமாக நெருங்கி வரும் அதிமுக - பாஜக.. லாபம் யாருக்கு.. நஷ்டம் யாருக்கோ!
திமுகவை வீழ்த்த அதிமுக - பாஜக அதிரடி வியூகங்களை வகுத்து வருகிறது
சென்னை: சமீப காலமாக அதிமுக - பாஜக உறவு வலுத்து வருகிறது.. சில மாதங்களுக்கு முன்பு விரிசல் என்று சொல்லப்பட்டதெல்லாம் காணாமல் மறைந்து விட்டது.. இரு கட்சிகளும் நெருக்கம் காட்ட ஆரம்பித்துள்ளனர்.. ஆனால் இறுதியில் லாபம் யாருக்கு என்றுதான் தெரியவில்லை!!
Recommended Video
உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற சமயத்தில் இருந்தே அதிமுகவுடன் பாஜகவுக்கு பனிப்போர் தொடங்கிவிட்டது.. அதிருப்திகள் லேசாக தெரிய ஆரம்பித்தன.. ஆனால் வெளிப்படுத்தவில்லை.
பாஜகவுக்கு இனியும் பணிந்து போக தேவையில்லை என்ற நிலைப்பாட்டிற்கு வந்த அதேசமயம், மக்கள் நலன்களில் கூடுதல் அக்கறை செலுத்த ஆரம்பித்தது அதிமுக அரசு.. குறிப்பாக முதல்வர் எடப்பாடியார்.
முதல்வர்
சட்டமன்ற கூட்டத் தொடர் நடந்தபோதே துறைவாரியான கேள்விகளை யார் எழுப்பினாலும் சரி, அந்தந்த அமைச்சர்கள் பதில் அளித்தபின்னரும் முதல்வர் தனியாக எழுந்து அவைகளுக்கு பதில் சொல்லி திணறடித்தார்.. கஜா புயலின் தாக்கத்தின்போது மக்களின் அதிருப்தியை சம்பாதித்த முதல்வர் காவிரி காப்பாளன்' என்ற பட்டத்தை பெற்றார்.. "ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை, சட்டம் தெளிவாக இயற்றப்பட்டுள்ளது" என்று தமிழகத்தில் 2 வருடமாக நிலவி வந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளியை வைத்தார்.
அதிமுக
இதனால் அதிமுகவின் பலம் கூடி கொண்டே வந்த சமயத்தில்தான், திமுகவோ டாப் கியர் போட்டு மேலே போக ஆரம்பித்துவிட்டது.. 2021 சட்டசபை தேர்தலில் எப்படியும் தங்களுக்குதான் வெற்றி என்ற நம்பிக்கையுடன் பிகேவுடன் களமிறங்கியதை கண்டு சற்று அதிமுக மிரளதான் செய்தது.. எனவே சட்டசபை தேர்தலை நோக்கி இரு கட்சிகளுமே ஆளாளுக்கு தனித்தனியாக வேகம் காட்டிய நிலையில் கிட்டத்தட்ட தனித்து விடப்பட்ட நிலைமை போலதான் தெரிந்தது.
ஒத்துழைப்பு
இந்த சமயத்தில்தான் கொரோனா நுழைந்தது.. வேறு வழியில்லை.. மத்திய அரசின் ஒத்துழைப்பும், உதவியும் இல்லாமல் எதையுமே செய்ய முடியாத நிலை மாநில அரசுக்கு ஏற்பட்டது.. வைரஸ் உலாவும் நேரத்தில் அரசியலை பேசினால் மொத்தமாக டேமேஜ் ஆகும் என்று திமுகவும் உணர்ந்தது.. அதனால் "மக்கள் நலன்" என்ற ஒரே புள்ளியில் கட்சிகள் களம் இறங்கின.. விமர்சனங்களும், கருத்துக்களும், எதிர்ப்புகளும் கொரோனா ஒழிப்பினை அடிப்படையாக கொண்டே நடக்க தொடங்கின.
தொற்று
தொற்று பாதிப்பு அதிகமாக ஏற்பட, ஏற்பட அதிமுக அரசுக்குதான் பிரச்சனை, சிக்கல்.. அதனால் மத்திய அரசிடம் கூடுமான வரை இணக்கமான போக்கைதான் கடைப்பிடித்தாக வேண்டிய நிலைமை உள்ளது.. அதற்காக கொரோனா ஒழிப்பில் அதிமுக அரசு எதுவுமே செய்யவில்லை என்ற மனசாட்சி உள்ள யாராக இருந்தாலும் சொல்ல முடியாது.. பாராட்டத்தகுந்த அளவுக்கு தமிழக அரசின் செயல்பாடு உள்ளது என்றாலும், அடுத்தடுத்த திமுகவை சமாளிக்க, நோய் எண்ணிக்கையை குறைக்க, மக்களின் அதிருப்திக்கும் ஆளாகிவிடாமல் கயிற்று மேல் நடக்கும் நிலையில் அதிமுக உள்ளது!!
அமித்ஷா
இந்த நேரத்தில் பாஜக வேறு கணக்கு போட்டு வருகிறது.. எப்படா தமிழ்நாட்டில் கால் ஊன்றலாம் என்று முயன்று முயன்று தோற்று வரும் நிலையில், இப்போது அந்த சந்தர்ப்பத்தை விடக்கூடாது என்று நினைக்கிறது.. அதிமுகவுடன் வலுவான உறவை வைத்து, அதன்மூலம் திமுக தரப்புக்கு கிலியை ஏற்படுத்த முடியும் என்றும், அமித்ஷா தரப்பில் கணக்கு போடப்படுகிறது.. தமிழகத்தில் நடக்கும் கொரோனா நிவாரண பணிகளைக் கவனிக்க நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரான அர்ஜுன் ராம் மேக்வாலை இதற்காகவே பிரதமர் நியமித்ததாகவும் சொல்லப்படுகிறது. மேக்வால்தான் தமிழக நிவாரணப் பணிகளை உன்னிப்பாக கவனித்து வருகிறார்.
சசிகலா
இன்னொரு பக்கம் அதிமுகவை பலப்படுத்தவும், பிளவுபட்ட பிரிவுகளை ஒருங்கிணைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. சசிகலா சிறையில் இருந்து வந்தாலும் அரவணைத்து கொள்ளும்படியும் சொல்லப்பட்டுள்ளது.. இதற்கெல்லாம் முக்கிய காரணம், திமுக எக்காரணத்தை கொண்டும் ஆட்சியை கைப்பற்றி விடக்கூடாது என்பதிலும் அதிமுகவை விட பாஜக தீவிரமாக உள்ளதாம்... அதனாலேயே கொரோனா காலத்திலும் பலமான உறவு அதிமுக-பாஜக இடையே ஏற்பட்டு வருகிறது.. தேவைப்பட்டால் திமுகவுக்கு எதிரான புதைந்து கிடக்கும் வழக்குகளை தூசி தட்டி கையில் எடுக்கவும் பாஜக தயங்காது என்றே சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்!!