திமுகவை வீழ்த்த.. தீவிரமாக அரங்கேறும் கப்சிப் மூவ்கள்.. விடாமல் முட்டுக்கட்டை போடும் உடன்பிறப்புகள்
திமுகவை வீழ்த்த அதிமுக அதிரடி வியூகங்களை வகுத்து வருகிறது
சென்னை: கொரோனாவைரஸ் தடுப்பு நடவடிக்கை ஒரு பக்கம் இருந்தாலும் தமிழக அரசியல் நிகழ்வுகளும், அதுகுறித்த விவாதங்களும் சத்தமில்லாமல் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
Recommended Video
வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கிதான் இருபெரும் கட்சிகளும் காய் நகர்த்த தொடங்கின.. ஆலோசனைகள், கூட்டணி குறித்த லேசான பேச்சுவார்த்தைகள் என ஆரம்பமாயின.. ஆனால் திடுதிப்பென இந்த கொரோனா குறுக்கே வந்துவிடும் என்று யாருமே எதிர்பார்க்கவே இல்லை.
இதையடுத்து, அனைத்த தேர்தல் குறித்த வியூகங்களும் தூர ஒதுக்கி வைக்கப்பட்டு, முழு கவனத்தையும் அரசியல் கட்சிகள் வைரஸை ஒழிப்பதில் திருப்பின.. களப்பணியில் இறங்கின.
கூட்டத்தொடர்
சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும்போதுகூட, கொரோனா ஒழிப்பில் அதிமுக செயல்பாடு நன்றாக உள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் வெளிப்படையாகவே பாராட்டு தெரிவித்திருந்தார்.. இதற்கு பிறகுதான் அறிக்கை போர்கள் ஆரம்பமாயின... கொரோனா குறித்த செயல்பாடுகளில் அதிமுக அரசு முனைப்பு காட்டவில்லை என்று காட்டமான பதிவுகள், அறிக்கைகள், பேட்டிகள், ட்வீட்கள், வர ஆரம்பித்தன.
எடப்பாடியார்
இதற்கு முதல்வர் எடப்பாடியார் சளைக்காமல் பதிலுக்கு பதில் தந்து கொண்டிருந்தாலும், இன்னும் அனைத்து கட்சி கூட்டம் நடத்தும் அளவுக்கு இணக்கம் வரவில்லை.. எதிர்க்கட்சிகள் என்ன டாக்டர்களா என்று அதிமுக கேட்டால், டாக்டர்களையே காப்பாற்ற தெரியாத அரசா மக்களை காக்க போகிறது என்று திமுக பதில் கேள்வி கேட்டு நிற்கிறது.
எண்ணிக்கை
இப்படி தொடர்ச்சியான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருவது அதிமுக தரப்பை லேசாக நடுக்கம் கொள்ளவே செய்துள்ளது.. இதற்கு நடுவில் கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்துவிட்டால், அதற்கும் பதிலளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது.. இதனாலேயே "தேர்தல் காய்ச்சல்" அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆலோசனை
கடந்த 19-ம் தேதி முதல்வரிடம் பிரதமர் போனிலும், வீடியோகான்பரன்ஸ் மூலமாகவும் பேசியுள்ளார்.. அப்போது தமிழகத்தின் கொரோனா நிவாரண பணிகள், நிலவரம் குறித்தெல்லாம் பிரதமர் விசாரித்துள்ளார்.. அந்த சமயத்தில்தான் திமுக முன்வைத்து வரும் எதிர்மறை கருத்துக்களை முதல்வர் தெரிவித்ததாக கூறப்படுகிறது... அதற்கு பிரதமர் சில ஆலோசனைகளையும் கூறினாராம்.
சசிகலா
திமுகவை வீழ்த்த ஏதாவது வியூகங்களை கையில் எடுக்க பாருங்கள்.. கட்சிக்குள் நிலவும் கோஷ்டி மோதலை தவிருங்கள்.. எல்லாரையும் ஒன்றிணைக்க பாருங்கள்.. ஒருவேளை சசிகலா விடுதலையானாலும், அவரையும் தவிர்த்துவிடாமல் கட்சிக்குள் அழைத்து கொள்ளுங்கள்.. அதனால் கட்சியை பலப்படுத்தும் விஷயத்தில் தீவிரமாக இறங்குங்கள்.. தயக்கம் கூடாது" என்றெல்லாம் சொல்லியதாக தெரிகிறது.
வைரஸ்
அறிக்கை விட்டு கொண்டே முக ஸ்டாலின் அதிமுகவை அலறவிட்டு கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள் திமுகவினர்.. அதேசமயம் இந்த நேரத்தில் திமுக தரப்பு எது செய்தாலும் அது அரசியலாகத்தான் பார்க்கப்படும் என்றும் மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர்.. இந்த வைரஸை வைத்து யாராலும் அரசியல் செய்ய முடியாது.. அப்படியே செய்தாலும் மக்கள் முன்பு எடுபடாது.. ஆனால் மாநில அரசுக்கு தொற்று ஒழிப்பில், திமுக தந்து வரும் அழுத்தம், மக்கள் மேல் உள்ள நலன், அக்கறைகளை குறைத்து மதிப்பிட முடியாது.
பலன்கள்
அதேபோல், இந்த கொரோனாவை கட்டுக்குள் வைத்திருப்பது அதிமுகவின் கையில் இல்லை.. அது உலக நாடுகளின் கையிலே இல்லாதபோது மாநில அரசை குறை சொல்வதும் எந்த வகையிலும் ஏற்க முடியாது.. ஆனால், தொற்று பாதிப்பை குறைத்துவிட்டாலோ, எண்ணிக்கையை மட்டுப்படுத்திவிட்டாலோ அத்தனை கிரடிட்-களும் அதிமுகவுக்குதான் நேரடியாக செல்லும் என்பதிலும் மாற்று கருத்து இல்லை!!