EXCLUSIVE: பாக்யராஜ் எங்களுக்கு தேவை.. அவரை விட மாட்டோம்.. குவிகிறது ஆதரவு
பாக்யராஜ் தனது ராஜினாமா திரும்ப பெற வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: பாக்யராஜ்தான் எங்களுக்கு தலைவராக வேண்டும்.. அவரது ராஜினாமாவை நாங்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டோம் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் ஒருமித்த குரலில் தெரிவித்து வருகின்றனர்.
நேற்றைய தினம் இயக்குனர் கே.பாக்யராஜ் தனது சங்க பதவியை ராஜினாமா... இதையடுத்து பெரும் அதிர்வலை ஏற்பட்டு.. தமிழ் திரையுலகமே கதிகலங்கி போய்விட்டது. உடனடியாக சங்கம் சார்பில் பதிலளித்த மனோஜ், "ராஜினாமாவை நாங்கள் ஏற்கமாட்டோம்" என்றார். ஆனாலும் பாக்யராஜ், தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இப்படி, பாக்யராஜின் இந்த திடீர் ராஜினாமா, அதனை ஏற்க மறுத்த சங்கம் சார்பான பதில் என ஒரே நாளில் தமிழக சினிமா சூடு கிளப்பி கொண்டிருக்கிறது. அவர் ராஜினாமா செய்தது சரிதானா? இந்த ராஜினாமாவை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள் என்று "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக சங்க நிர்வாகிகளிடமே கேட்டோம். அவர்கள் அளித்த கருத்துக்கள்தான் இவை:
ரமேஷ் கண்ணா (திரைப்பட எழுத்தாளர் சங்க பொருளாளர், தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர்)
எங்கள் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தலைவர் பாக்யராஜ் திடீரென ராஜினாமா செய்திருக்கிறார் என்பதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். நான் மதுரையில் இருப்பதால் என்னால் உடனடியாக அவரை நேரில் சந்திக்க முடியவில்லை. எங்களுக்கு எல்லோருக்குமே இது பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால் அவர் தேர்தலில் நின்று ஜெயித்து இந்த பொறுப்புக்கு வரவில்லை. நாங்களாகத்தான் அவரை கௌரவப்படுத்த இந்த பதவியை அவருக்கு கொடுத்தோம். அவர் இப்படி திடுதிப்பென்று பதவியை ராஜினாமா செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. எங்களுக்கு இப்படிப்பட்ட ஒரு தலைவர்தான் தேவை. எங்கள் சங்கத்துக்கு அவர் தேவை. அவரை ராஜினாமா செய்ய விடவே மாட்டோம்.
சி.ரங்கநாதன், (திரைப்பட எழுத்தாளர் சங்க இணை செயலாளர், இயக்குனர், நடிகர், எழுத்தாளர்)
இயக்குனர் பாக்யராஜ் ராஜினாமா செய்ய கூடாது. நாங்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம். பாக்யராஜ் பொறுப்பில் இருப்பதுதான் சங்கத்துக்கே பெருமை. அவர் இல்லையென்றால் சங்கத்தின் பலமே போய்விடும். பொதுக்குழுவில் நாங்கள்தான் அவரை ஏகமனதாக தேர்ந்தெடுத்தோம். இயக்குனர்கள் பாக்யராஜ், விக்ரமன், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமையில் செயற்குழு உறுப்பினர்கள் தேர்தல் நடத்தப்பட்டு நாங்கள் எல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்டோம்.
திரும்ப பெற வேண்டும்
இந்த நம்பிக்கையை எங்களுக்கு கொடுத்ததே பாக்யராஜின் தமைமையால்தான். எனவே அவருடைய ராஜினாமா திரும்ப பெற வேண்டும். அதற்காக நாங்கள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த சர்க்கார் பட விஷயத்தில், ஒரு இயக்குனர், பெரிய நிறுவனம், தயாரிப்பு நிறுவனம் என்றெல்லாம் அவர் பார்க்காமல், மரியாதைக்குரிய முருகதாசையும், வருணையும் உறுப்பினராக பார்த்துதான் ஒரு முடிவை எடுத்திருக்கிறார். இதன்காரணமாக பாக்யராஜ்க்கு கிடைத்திருப்பது மிக மிக நல்ல பெயர்தான்.
சங்கத்துக்கு கவுரவம்
இது சங்கத்துக்கு கௌரவுமான, வெற்றிகரமான விஷயம். யாராவது இயக்குனர் பாக்யராஜை காயப்படுத்தியிருந்தாலோ, பேசியிருந்தாலோ, இந்த ஒன் இந்தியா தமிழ் இணையதளம் மூலமாக அவர்கள் அனைவரின் சார்பாகவும் நான் அவரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனவே பாக்யராஜ் அவர்கள் தனது ராஜினாமாவை தயவு செய்து வாபஸ் பெற வேண்டும்.
டி.எஸ்.ஆர். சுபாஷ்... (திரைப்பட எடிட்டர், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர்)
சர்க்கார் பட கதையும், செங்கோல் பட கதையும் ஒன்றுதான் என்பது விஜய்க்கு தெரிந்திருக்க வேண்டும், விஜய்க்கு தெரியுதோ இல்லையோ கண்டிப்பாக எஸ்ஏ. சந்திர சேகருக்கு தெரிந்திருக்கும். தன்னிடம் நீண்ட காலமாகவே உதவியாளராக இருந்தவர்தான் வருண். பல வருடங்களுக்கு முன்னே இந்த கதையை அவரிடம்தான் வருண் சொல்லி இருக்கிறார். விஜய்யை வைத்து இந்த படத்தை எடுத்தே ஆக வேண்டும் என்றுதான் எஸ்.ஏ.சி.யிடம் அறிமுகமே ஆகி இருக்கிறார். அப்படி இந்த படத்தை தனது வாழ்வாதாரமாகவே நினைத்து வாழ்ந்தவர். இதில் வருண் கதையைதான் முருகதாஸ் எடுத்தார் என்று நாம எடுத்து கொள்வதைவிட, ஒரே கருத்தை மையமாக வைத்து இருவருமே யோசித்திருக்கலாம் என்றுகூட எடுத்துக் கொள்ளலாம்.
எந்த நியாயமும் இல்லை
ஆனால் இந்த பிரச்சனையை ஆரம்பத்திலேயே வளரவிடாமல் எஸ்.ஏ.சி., தடுத்திருக்கலாம். அல்லது முருகதாஸ் ஸ்டைலில், முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க வேண்டும் என்று எஸ்.ஏ.சி. ஆசைப்பட்டிருந்தாலும்கூட, இந்த கதையின் கருவை தந்த வருணுக்கு ஏதாவது ஒரு வகையில் ஒரு கிரிடிட் தந்திருக்கலாம். இப்படி பிரச்சனையை வளர்த்திருக்காமல், பெரிதாக்கிவிடாமல் என்னிக்கோ முடிவு எட்டப்பட்டு இருக்கும். அதேசமயத்தில் இவ்வளவு பழிகளை பாக்யராஜ் மீது சுமத்தி விட்டு, பின்பு அவரது ராஜினாமா ஏற்க மாட்டோம் என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை.
அமோக வெற்றி பெறுவார்
எதற்காக இவர்கள் அனைவரும் அவரது ராஜினாமாவை வேண்டாம் என்கிறார்கள்? பாக்யராஜ் ராஜினாமா செய்துவிட்டால், கூடவே தாங்களும் ராஜினாமா செய்ய வேண்டி வருமோ என யோசிக்கிறார்களா என தெரியவில்லை. எனவே பாக்யராஜ் ராஜினாமா செய்ததில் எந்த தவறும் இல்லை. சரியான முடிவைதான் எடுத்திருக்கிறார். அவரது ராஜினாமாவை சங்கம் ஏற்றுக் கொள்ளட்டும், மீண்டும் தேர்தலை நடத்தட்டும், யார் எதிர்த்து நின்றாலும் சரி, ஒரு நியாயமான விஷயத்துக்காக இவ்வளவு துன்பப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் பாக்யராஜ், மீண்டும் தேர்தலில் அமோகமாக வெற்றி பெறுவார் என்பது மட்டும் உறுதி.
இவ்வாறு டி.எஸ்.ஆர். சுபாஷ் கூறினார்.