குடும்பத்துடன் காஞ்சிபுரம் வருகிறார் குடியரசுத் தலைவர்... அத்தி வரதரை தரிசனம் செய்கிறார்
சென்னை: காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசனம் செய்ய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாளை குடும்பத்துடன் சென்னை வருகிறார்.
இதற்காக பிற்பகல் 2.10 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வருகிறார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் விமான நிலையத்தில் இருந்து தனி ஹெலிகாப்டரில் காஞ்சிபுரம் புறப்பட்டு செல்கிறார்.
அங்கு அத்திவரதரை தரிசனம் செய்கிறார். அதன்பிறகு ஹெலிகாப்டரில் மீண்டும் மாலை 5 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமானநிலையம் வருகிறார். அங்கிருந்து குண்டு துளைக்காத காரில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று தங்குகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி சமரச குழு ஜூலை 18-ல் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!
பின்னர், சனிக்கிழமை மாலை 4.35 மணிக்கு தனி விமானத்தில் ஆந்திர மாநிலம் ரேனிகுண்டா விமான நிலையத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து காரில், திருப்பதி திருமலை கோவிலுக்கு செல்கிறார். அன்று இரவு மலை கோவிலில் தங்குகிறார்.
ஞாயிற்றுக்கிழமை காலை திருமலை வெங்கடேஸ்வரரை தரிசனம் செய்கிறார். அன்று மாலை திருமலையில் நடைபெறும் ஆர்ஜித சேவை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதன்பிறகு 15 -ந்தேதி தனது குடும்பத்தினருடன் ரேனிகுண்டா விமான நிலையத்துக்கு சென்று, அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.