Tamil Nadu Budget 2019: விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி.. விரைவில் அத்திக்கடவு- அவினாசி திட்டம்!
Recommended Video
சென்னை: அத்திக்கடவு - அவினாசி திட்டம் விரைவில் தொடங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்திக்கடவு-அவினாசி திட்டம் என்பது பில்லூர் அருகில் உள்ள பவானி ஆற்றிலிருந்து 2,000 கன அடி வெள்ள உபரி நீரை கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களிலுள்ள வறட்சி மிக்க காரமடை, மேட்டுப்பாளையம், அன்னூர், திருப்பூர், அவினாசி, சேவூர், குன்னத்தூர், பெருந்துறை, காங்கேயம், ஊத்துக்குளி, நம்பியூர் மற்றும் புளியம்பட்டி பகுதிகளில் உள்ள முப்பத்து ஒன்று ஏரிகள், நாற்பது ஊராட்சி ஒன்றியக் குளங்கள் மற்றும் ஏனைய 538 நீர் நிலைகளில் நிரப்புவதன் மூலம், நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கல் திட்டமாகும்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திட்டம் விரைவில் தொடங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இதுகுறித்த அறிவிப்பு தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் உரையில் ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில் தமிழகத்தில் உள்ள 89 அணைகளில் ரூ.745.49 கோடி செலவில் புனரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்திற்காக ரூ.43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
37 அணைகளில் கட்டமைப்பை புனரமைக்கும் பணிகளை 2வது கட்டமாக மேம்படுத்தப்படும். அத்திக்கடவு-அவினாசி திட்டம் விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திட்டத்தின் ஒரு பகுதியாக சுய பயன்பாட்டுக்கு மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை 132.8 கோடி செலவில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 2019-20 பட்ஜெட்டில் நீர்வளத்துறைக்கு ரூ.5983.98 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றார்.