ஏனுங்க.. எத்தினி வருஷமாங்க நிதி ஒதுக்கிட்டே இருப்பீங்க.. கொந்தளிக்கும் கொங்கு மண்டலம்
அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது பொதுமக்களை குமுற செய்துள்ளது.
Recommended Video
சென்னை: "ஏனுங்க... எத்தனை வருஷம்தாங்க நிதி ஒதுக்கிட்டே இருப்பாங்க.. இது என்ன புது திட்டமா? இந்த வருஷமும் நாங்க ஏமாற வேண்டியதுதானா?" என்று கொங்கு மண்டல மக்கள் கொதித்து போய் கேட்கிறார்கள்.
வழக்கமாக தேர்தல் வாக்குறுதிகளில் கட்டாயம் இடம்பெறுவதில் அவினாசி - அத்திக்கடவு திட்டமும் ஒன்றாகும்.
ஏனென்றால் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்ட மக்களின் குறிப்பாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கக்கூடிய குடிநீர் திட்டம் என்பதுதான் காரணமே.
பட்ஜெட் தாக்கல்
அதுபோல பட்ஜெட் தாக்கலின்போது இந்த திட்டத்துக்காக நிதி ஒதுக்குவதும் வழக்கமான ஒன்றுதான். அத்திக்கடவு, அவினாசி என்றாலே வெறும் திட்டமாகவே இருந்து வருகிறது.
வெறும் சம்பிரதாயம்
அது மட்டுமல்ல, இத்திட்டத்தை மாநில அரசே செயல்படுத்தும் என்று நிதி ஒதுக்குவதும், உடனே மத்திய அரசிடமும் பிரதமரை சந்திக்கும்போதும் அவினாசி - அத்திக்கடவு திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டுமென்று கோரிக்கை வைப்பதும் வழக்கமாக நடைபெறும் சம்பிரதாயமாக பார்க்கப்படுகிறது. இப்போதும்கூட இத்திட்டத்திற்கு 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக துணை முதல்வர் இன்று அறிவித்துள்ளார்.
உண்ணாவிரதம்
இது குறித்து கோவை மாவட்ட மக்கள் சிலரிடம் கருத்து கேட்டபோது, சொன்னதாவது: "இந்த திட்டத்தை நிறைவேற்ற நாங்க என்ன செய்யலன்னு சொல்லுங்க? பேரணி, நடைப்பயணம், கடையடைப்பு, சாகும்வரை உண்ணாவிரதத்திலிருந்து மொட்டை அடிச்சு போராட்டம் வரை எல்லாமே செஞ்சோம். கடைசியில சோர்ந்தும் போயிட்டோம்.
என்ன தடை?
இப்படியே நிதியை ஒதுக்கி ஒதுக்கி எங்களை முட்டாளாக்கிட்டே இருந்தா என்ன பண்றது? ஒதுக்குற நிதி கூட அவங்களோட சொந்த பணம் இல்லை.. எல்லாம் மக்கள் பணம்தான். இந்த திட்டத்தை நிறைவேற்றதுல அப்படி என்னதான் தடை இருக்குன்னே புரியல" என்கின்றனர்.
இனி இந்த திட்டம் சம்பந்தமாக அரசு விரைந்து செயல்படுமா? அல்லது கிடப்பில் இந்த வருடமும் கிடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.