அரசு மருத்துவமனைகளில் "ஏடிஎம்"கள்.. கால் கடுக்க நிற்காமல் கார்டை தேய்த்து மருந்தை பெறும் முயற்சி!
சென்னை: தமிழகத்தில் உள்ள ஏடிஎம் மையங்களை போல் அரசு மருத்துவமனைகளில் எந்திரங்கள் மூலம் மருந்துகளை பெற்று கொள்ளும் புதிய திட்டத்தை உருவாக்க தமிழக அரசு யோசனையில் உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் (தமிழகம் முழுவதும்) சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் உள்நோயாளியாக ஆயிரக்கணக்கானோர் தங்கியுள்ளனர்.
புறநோயாளியாக வந்து சிகிச்சை பெறும் லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்துக்கு பயந்து கொண்டு அதிகாலையிலேயே வரிசையில் நிற்க தொடங்கிவிடுகின்றனர். மருத்துவரை பார்த்துவிட்டு மருந்துகளை வாங்கவும் ஏராளமானோர் கூடுவதால் வயதானவர்கள், நிரீழிவு நோயாளிகள், உயர் ரத்த அழுத்த நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
ஆலோசனை
இதை கருத்தில் கொண்டு நோயாளிகளின் கால விரயத்தை குறைக்க அரசு மருத்துவமனைகளில் பணம் எடுக்கும் இயந்திரங்கள் போல் மருந்து பெறும் இயந்திரங்களை நிறுவ திட்டமிட்டு வருகிறது. பணத்தை செலுத்தினால் மருந்துகள் கிடைக்கும் வகையில் இயந்திரங்கள் அமைக்க ஆலோசித்து வருகிறது.
சாப்ட்வேர்
இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில் இயந்திரங்கள் பார் கோடுகளுடன் கூடிய மருந்துச் சீட்டுகளை படித்து பார்த்துவிட்டு மருந்துகளை வழங்கும் வகையில் கட்டளைகள் கொண்ட சாப்ட்வேர் மூலம் இயங்கும்.
3-ஆவது தடவை
நீண்ட காலம் சிகிச்சை எடுக்கும் நோயாளிகள் 3 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவரை பார்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனை ஒரு மாதத்துக்கான மருந்துகளை மட்டுமே வழங்குகிறது. மீதமுள்ள இரு மாதங்களுக்கு மருந்து ஸ்டாக் வந்தவுடன் வந்து வாங்குகின்றனர். 3-ஆவது தடவை மருத்துவரை சந்திக்கின்றனர்.
எந்திரங்கள்
எனவே மருந்து வழங்கும் எந்திரங்களை நிறுவினால் மருத்துவமனைகளில மருந்தாளுநர் பற்றாக்குறைக்கு உதவியாக இருக்கும். ஒரு நோயாளி இரு முறை மருந்து சீட்டை எந்திரத்தினுள் புகுத்தினாலோ அல்லது மருத்துவரை பார்க்காமலேயே இருந்தாலோ அவர்களுக்கு எந்திரங்கள் மருந்துகளை வழங்காது.
திரும்புவர்
அது போல் எத்தனை பேர் மருந்துகளை வாங்கினர், எத்தனை பேர் மருந்துகளை வாங்க வில்லை, ரத்த அழுத்தம், சர்க்கரை, காசநோயாளிகளின் தகவல்களையும் எந்திரங்களில் இருந்து பெற்று கொள்ளலாம். மருந்துகளை வாங்க நடையாய் நடப்பதற்காகவே பலர் அரசு மருத்துவமனைகளை கைவிட்டுள்ளனர். இதுபோன்ற வசதிகள் மூலம் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்பவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு திரும்பி விடுவர் என்றார்.