கோர்ட்டில் பறந்த கார்.. வழக்கறிஞர்கள் மீது மோதல்… விசாரணையில் சிக்கிய போலி அதிகாரி
சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவர் என்று கூறி சொகுசு காரில் வேகமாக வந்தவரை வழக்கறிஞர்கள் பிடித்து போலீசில் ஒப்படைந்தனர்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சிபிஐ என ஸ்டிக்கர் ஒட்டிய கருப்பு நிற ஆடி கார் ஒன்று நுழைந்தது. அதிவேகத்தில் வந்த அந்த காரானது விபத்தில் சிக்கியது. மின்னல் வேகத்தில் கார் மோதியதில் வழக்கறிஞர் முரளிதரன் உள்ளிட்ட சிலர் காயம் அடைந்தனர்.
இதனையடுத்து காரை வழக்கறிஞர்கள் சுற்றி வளைத்து அந்த நபரை பிடித்து விசாரித்தனர். பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி என்றும், உதவி ஆணையர், சிபிஐ அதிகாரி என முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலி அடையாள அட்டை ஒன்றையும் காட்டியுள்ளார்.
சந்தேகம் அடைந்த வழக்கறிஞர்கள் அவருடைய காருக்குள் சென்று பார்த்தனர். நாடாளுமன்ற ஸ்டிக்கர், சிபிஐ ஸ்டிக்கர், இண்டர்போல் ஸ்டிக்கர், ஏர்போர்ட் அத்தாரிட்டி ஸ்டிக்கர் என பல ஸ்டிக்கர்களை அந்த நபர் வைத்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த நபர் மற்றும் அவருடைய சிபிஐ என்ற ஸ்டிக்கர் ஒட்டிய சொகுசு கார் ஆகியவற்றை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.இது தொடர்பாக இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.