எதிர்பார்த்தது ஒன்று.. நடந்தது ஒன்று.. நிர்மலா பிரஸ் மீட்டால் ஏமாற்றமடைந்த வாகன நிறுவனங்கள்
Recommended Video
சென்னை: ஆட்டோமொபைல் நிறுவனங்களின் சரிவை சரி செய்ய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெரிய திட்டத்தை கொண்டு வருவதற்கான பிரஸ் மீட் என எதிர்பார்த்த ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஏமாற்றமடைந்தன என்றுதான் சொல்ல வேண்டும்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை அண்மையில் சந்தித்தார். அப்போது அவர் பொதுத் துறை வங்கிகளை இணைப்பதாக அறிவித்தார். 2017-ஆம் ஆண்டு 27 பொதுத் துறை வங்கிகள் இருந்தன. நேற்றைய அறிவிப்புக்கு பின்னர் நாட்டில் மொத்தம் 12 பொதுத் துறை வங்கிகள்தான் இருக்கும். இது போல் வங்கிகள் இணைக்கப்படுவதால் வங்கிகள் கடன் கொடுக்கும் அளவு அதிகரிக்கும் என்றார்.
மேலும் நாட்டின் ஜிடிபி 5 சதவீதமாக உள்ளது என நிர்மலா கூறியிருந்ததை பார்க்கும் போது நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது என்பது கண்கூடாக தெரிகிறது. மேலும் பிஎஸ் 4 ரக வாகனங்களுக்கு பதிலாக அடுத்த ஆண்டு முதல் பிஎஸ் 6 ரக வாகனங்களை மட்டும் இனி விற்பனை செய்ய முடியும் என்ற உச்சநீதிமன்ற அறிவிப்பாலும் தற்போது வாகன விற்பனை குறைந்து ஆட்டோமொபைல் தொழிலில் சரிவு ஏற்பட்டுள்ளது.
ஆட்டோமொபைல் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டது ஏன்?.. நிர்மலா விளக்கம்
ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு
இதற்கு பொருளாதார மந்த நிலையே காரணம் என கூறப்பட்டு வந்தன. சுசூகி, அசோக் லேலண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அளிப்பதும், குறிப்பிட்ட நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்துவதும் என அறிவிப்புகளை வெளியிடுகிறது.
ஜிஎஸ்டி குறைப்பு
இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை மாற வேண்டும் என்றால் வாகனங்களின் மீதான ஜிஎஸ்டியை 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என வாகன நிறுவனங்களும் நிபுணர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வட்டாரங்கள்
ஆனால் இது போல் அறிவிக்க வேண்டும் என்றால் அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் இதே கோரிக்கையை முன்வைத்தால் ஜிஎஸ்டி கவுன்சிலில் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
செய்தியாளர்கள்
இதை செய்தால் வாகனத்தின் விலை குறையும், அதற்கான கடன் தொகையும் குறையும் என்பதால் ஜிஎஸ்டி குறைப்பை அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்று சென்னையில் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்திப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஏமாற்றம்
இதனால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மிகப் பெரிய அறிவிப்பை எதிர்பார்த்தன. ஆனால் அவரோ 100 நாட்களில் மோடி அரசு செய்த சாதனைகளை பட்டியலிட்டதோடு, ஆட்டோமொபைல் தொழில் சரிவிற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது என கூறிவிட்டு சென்றதால் நிறுவனங்கள் ஏமாற்றமடைந்தன.