வாகன நெரிசலை தவிர்க்க தீபாவளி வரை, டோல்கேட்டுகளில் சுங்க கட்டணம் வாங்க கூடாது.. ஐடியா எப்படி?
சென்னை: தீபாவளியை முன்னிட்டு சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து தமிழர்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு மொத்தமாக கிளம்பிச் செல்கின்றனர்.
பஸ்கள் ரயில்கள் என அனைத்திலும் டிக்கெட்டுகள் முழுமையாக நிரம்பி விட்ட நிலையில் சொந்தமாக கார் வைத்துள்ளார்கள் அதிலும், வாடகை கார் மூலமாகவும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதை பார்க்க முடிகிறது.
வரும் செவ்வாய்கிழமை தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், திங்கட்கிழமை அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஒரே கூட்டம்
எனவே சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என நான்கு நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை இருப்பதன் காரணமாக, நேற்று மாலையே சென்னை, பெங்களூர், கோவை உள்ளிட்ட நகரங்களிலிருந்து தமிழகத்தில் உள்ள மற்ற நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் வாகனங்கள் அணிவகுக்க ஆரம்பித்தன. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் இருந்ததை பார்க்க முடிந்தது.
என்ன நோக்கம்
சாலையை விரிவாக்கி போக்குவரத்தை வேகப்படுத்துவது தான் தங்க நாற்கரச் சாலையின் நோக்கம். இதன் பிறகுதான் இரு வழிச்சாலைகள் பலவும், நான்கு வழிச் சாலைகளாக மாற்றப்பட்டு, அதற்காகும் செலவை வசூலித்துக்கொண்டு சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டன. ஆனால் எந்த நோக்கத்திற்காக சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டனவோ, அதை இது போன்ற பண்டிகை கால கூட்ட நெரிசல் வீணாக்க செய்து விடுகிறார்கள். வேகமாக பயணிக்க வேண்டும் என்பதுதான் சாலை விரிவாக்கத்திற்கும், சுங்க சாவடிகளுக்குமான நோக்கம் எனும்போது, பண்டிகை காலங்களில் சுங்க சாவடிகளாலேயே, போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டு பயண நேரம் நீள்கிறது.
சுங்க வரி ஏன்
நிலைமை இப்படி இருக்கும்போது, சுங்க வரி வசூலிக்க வேண்டுமா என்று கேள்வி எழுகிறது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு மேலாக சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்க நேரிட்டால், அவர்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என்கிறது விதிமுறை. அப்போதுதான் இந்த சுங்க சாவடி அமைத்ததற்கு உண்மையான அர்த்தம் கிடைக்கும். எனவே இன்று, நாளை ஞாயிற்றுக்கிழமை, நாளை மறுநாள் திங்கட்கிழமை ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து பிற பகுதிகளுக்கு செல்லக்கூடிய சாலைகளில் சுங்கக் கட்டணத்தை தவிர்த்து வாகனங்களை அப்படியே செல்வதற்கு அனுமதிக்கவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
அதிகாரிகள் கவனத்திற்கு
எதிர்புறமாக வருபவர்களிடம் வேண்டுமானாலும் வழக்கம் போல சுங்க வரி வசூல் செய்யலாம், என்பது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கருத்தாக உள்ளது. இதேபோல்தான் தமிழர்கள் அதிகம் வாழும், கர்நாடக தலைநகர் பெங்களூரு, கோவை போன்ற பெரு நகரங்களில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செல்லக்கூடிய சாலைகளில் அமைந்துள்ள சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்காமல் இருப்பதன் மூலம், வாகனங்கள் வேகமாக பயணிக்க முடியும். பயணிகளுக்கு பயண நேரம் நீளாது. மெதுவாக நகரும் வாகனங்களால் புகை மாசு அதிகரித்து, சுற்றுச்சூழல் பாதிக்காது என்கிறார்கள் விவரம் அறிந்தோர்.