அயோத்தி தீர்ப்பு நல்ல தீர்ப்புதான்.. மக்கள் அமைதி காக்க வேண்டும்.. வைகோ கருத்து!
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியது நல்ல தீர்ப்புதான் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்துள்ளார்.
சென்னை: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியது நல்ல தீர்ப்புதான். இந்தியாவில் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்துள்ளார்.
அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் ஒரே தீர்ப்பை வழங்கி உள்ளனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்துள்ளார். அதில், அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியது நல்ல தீர்ப்புதான். இந்தியாவில் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சிறுபான்மையினரை இந்தியாவில் பெரும்பான்மையினர் அரவணைத்து செல்ல வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும். திமுக மதிமுக கூட்டணி நன்றாக இருக்கிறது. திமுக அணியில் மதிமுக தொடர்ந்து நீடிக்கும். மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்று வைகோ குறிப்பிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கு பின் காஷ்மீர் பிரச்சனையின் போது, காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்ததற்காக வைகோவிற்கும் தமிழக காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் சண்டை வந்தது. மாறி மாறி மதிமுகவினரும், காங்கிரஸ் கட்சியினரும் சண்டை போட்டனர்.
இதனால் திமுக கூட்டணி உடைக்கிறதா என்று கேள்வி எழுந்தது. ஆனால் திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம் என்று வைகோ குறிப்பிட்டு இருக்கிறார்.