ஆயுத பூஜை பண்டிகை இன்று உற்சாக கொண்டாட்டம்.. களைகட்டியது தமிழகம்!
சென்னை: நாடு முழுவதும் ஆயுத பூஜை பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் கடைகள், அலுவலங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் கடவுளுக்கு பழங்கள், பூக்கள், பொறி போன்ற பொருட்கள் வைத்து உற்சாக கொண்டாடி வருகிறார்கள்.
நாடு முழுவதும் ஆயுத பூஜை கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே சென்னை, திருச்சி, மதுரை, சேலம், நெல்லை, கன்னியாகுமரி உள்பட பல்வேறு நகரங்களில் ஆயுத பூஜைக்கு தேவையான பூ, பழங்கள், பொறி போன்ற பொருட்கள் விற்பனை களைகட்டியது.
கடைசி நாளான நேற்று விற்பனை விறுவிறுப்பாக இருந்தது. விடிந்தால் ஆயுத பூஜை என்பதால், ஏராளமான மக்கள் சந்தைகளில் குவிந்து தங்களுக்கு தேவையான பழங்கள், தேங்காய்க்கள், வாழை மரங்கள், பொரி, சந்தனம், குங்குமம், சாம்பிராணி உள்பட என பூஜை பொருட்கள் அனைத்தையும் வாங்கி சென்றனர்.
இதனால் பழங்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது, ஆப்பிள் பழங்களின் விலை கிலோ அதிகரித்தது. சென்னை மாதவரம் பழமார்க்கெடடில் ஆப்பிள் ரூ.100 முதல் 150 வரை விற்பனையானது. மாளை 110 முதல் 160 வரையிலும், சாத்துக்குடி 50 முதல் 70 வரையிலும், கொய்யா 50 முதல் 60 ரூபாய் வரையிலும், திராட்சை 80 ரூபாய்வரையிலும், வாழைத்தார் 250 முதல் 500 ரூபாய் வரையிலும் விற்பனையானது. அனைத்து பழங்களும் கிலோ 15 முதல் 20 ரூபாய் வரை அதிகமாக விற்கப்பட்டது.
இதேபோல் சென்னையில் பூ விலையிலும் 3 மடங்கு உயர்ந்துள்ளது. மல்லிகை பூ 1 கிலோ ரூ. 900 வரையிலும் பீச்சிப்பூ 600 ரூபாய் என்றும், சாமந்தி பூ 100 ரூபாய் ஆகவும், ரோஜா 200 ரூபாய் வரையிலும், அரளி பூ 300 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது. சில்லறை பூ விற்பனையில் இதை விட 20 ரூபாய் அதிகமாக விற்கப்பட்டது.
இதேபோல் பொரி ஒரு படி ரூ.20, அவல் ஒரு கிலோ ரூ.100, வாழைக்கன்று ரூ.20, மாவிலை தோரணம் இரண்டு ரூ.20, வெள்ளை பூசணி ரூ.20 முதல் ரூ.50 வரையிலும் விற்கப்பட்டது. எனினும் காய்கறிகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. மக்கள் விலை கொஞ்சம் அதிகமாக இருந்தபோதிலும், விலையை பற்றி கவலைப்படாமல் வேண்டிய பூஜை பொருட்களை, பழங்களை வாங்கி சென்றனர். இன்று வீடுகளில், கடைகளில், அலுவலங்கள், தொழிற்சாலைகள் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் சுத்தம் செய்யப்பட்டு, கடவுளுக்கு பழங்கள், பொரி உள்ளிட்ட படையலை படைத்து, உற்சாகமாக கொண்டாடி மகிழ்கிறார்கள். பல்வேறு தொழிற்சாலைகள், வாகனங்கள் மின் விளக்குகளால் ஜொலிக்கின்றன.