ஆயுதபூஜை, விஜயதசமி: வெற்றி மேல் வெற்றி பெற்று வாழ ஆளுநர், முதல்வர் வாழ்த்து
ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு ஆளுநர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.
சென்னை: நாடு முழுவதும் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மக்கள் கல்வி, செல்வம், ஆற்றல் பெற்று வளமோடு வாழ வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட பல அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
நவராத்திரி நாட்களில் அரக்கன் மகிஷாசுரனை தேவி வதம் செய்த நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அன்னையின் ஆயுதங்களை பூஜை செய்த நாள் ஆயுத பூஜையாகவும், தசமி திதியில் பத்தாம் நாள் அசுரனை அழித்த தேவியின் வெற்றியை கொண்டாடும் விதமாக விஜயதசமி கொண்டாடப்படுவதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அமைதி, நல்லிணக்கம், மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை நாட்டு மக்களுக்கும், நமது மாநில மக்களுக்கும் இந்த விழா கொண்டு வரட்டும் என கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் பழனிசாமியின் வாழ்த்து செய்தியில், ஆயுத பூஜை, விஜயதசமி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்களுக்கு வாழ்த்துக்கள். தமிழக மக்கள் எல்லா வளங்களுடன், வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற்று, சீரோடும் சிறப்போடும் வாழ வேண்டும். மனித வாழ்வில் ஏற்றம் பெற ஆற்றல்,செல்வம், கல்வி ஆகியவை இன்றியமையாதது என்று தெரிவித்துள்ளார்.
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை:
நவராத்திரி பண்டிகையில் 9 திருநாட்களில் இறுதி நாளில் ஆயுத பூஜையும் பத்தாவது நாளில் விஜயதசமியும் பக்தியுடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்கள்.
ஒவ்வொருவரின் வாழ்வுக்கும் ஆதாரமாகத் திகழ்கின்றன அவரவரது தொழில் வளம் பெருகிட மக்கள் அன்னையின் அருள் வேண்டி தொழிலுக்கு ஆதாரமாக விளங்குகின்ற கருவிகளையும் இயந்திரங்களின் தூய்மைப்படுத்தி சந்தனம் குங்குமம் இட்டு அவற்றை பொருளாக கருதி வழிபடும் நாள் ஆயுத பூஜை திருநாளாகும். விஜயதசமி தினத்தன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றியில் முடிவடையும் என்பது அனைவரது நம்பிக்கை.
இத்தகைய சிறப்பு மிக்க ஆயுத பூஜை, விஜயதசமி திருநாளில் அன்னையின் அருளால் மக்கள் அனைவரும் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற்று அனைத்து நலன்களையும் வளங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திட மனமார்ந்த ஆயுதபூஜை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில், கொரோனா பெருந்தொற்றின் கரணமாக முடங்கிப் போயிருந்த தொழில்கள் அனைத்தும், அதை சார்ந்து இருக்கின்ற தொழிலாளர்களும் நம்பிக்கையோடு வெற்றிப் படிகளில் முன்னேற ஆயுத பூஜை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.