அறிவாலயத்தின் கதவுகள் எப்பப்பா திறக்கும்.. காத்திருக்கும் அய்யாக்கண்ணு!
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு சந்தித்து பேசுவதற்காக பிரயாசைப்படுகிறாராம். ஆனால் திமுக தரப்பில் அவருக்கு நேரம் தராமல் காத்திருப்பில் பட்டியலில் வைத்துள்ளார்களாம்.
லோக்சபா தேர்தலுக்கு முன்பு தமிழகத்தை மட்டுமல்லாமல் டெல்லியையும் சேர்த்து அதிர வைத்தவர் அய்யாக்கண்ணு.. டெல்லியில் அவர் நடத்திய தொடர் போராட்டம், நிர்வாணப் போராட்டம், அரை நிர்வாணப் போராட்டம் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தேர்தல் நெருங்கிய சமயத்தில் அவர் அந்தர்பல்டி அடித்ததால் பரபரப்புஏற்பட்டு விட்டது. அமித் ஷாவை சந்தித்ததோடு மட்டுமல்லாமல் தனது நிலையிலிருந்தும் படாரென்று விலகி விட்டார் அய்யாக்கண்ணு. இதுதான் அவர் மீதான அத்தனை நல்ல பெயரையும் காலி செய்து விட்டது.
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க தீவிரமாக முயன்று வருகிறாராம் அய்யாக்கண்ணு. ஆனால் அறிவாலயம் இதுவரை எஸ் சொல்லவில்லையாம். காரணம் குறித்து விசாரித்தால், 'அந்தர்பல்டி அய்யாக்கண்ணுவுக்கு நேரம் தந்து தளபதியின் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை' என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தினர்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பு வரை பாஜகவையும், அதிமுகவையும் கடுமையாக எதிர்த்து வந்த அய்யாக்கண்ணு தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவிடம் அடிபணிந்தது திமுகவினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கூட்டுறவு சங்கத்தில் பெற்ற நகைக்கடன்களை மக்கள் கட்டியே ஆக வேண்டும், தள்ளுபடி எல்லாம் செய்ய முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியிருப்பதை கண்டித்து போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ள அய்யாக்கண்ணு, அதில் ஸ்டாலினை பங்கேற்க வைக்க விரும்புகிறாராம்.
ஏனென்றால், திமுக தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு சங்க கடன் தள்ளுபடி செய்யப்படும் என ஸ்டாலின் அறிவித்திருந்ததால், அவரை வைத்து அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு பதிலடி தரலாம் என எண்ணினாராம் அய்யாக்கண்ணு.
ஆனால் 'இவரை நம்பி போய் இறுதியில் இவர் அமைச்சரின் பக்கமே சென்று விடுவார்' 'நம்பிக்கைக்குரிய நபர் அல்ல அய்யாக்கண்ணு' என எண்ணுகிறதாம் திமுக தலைமை. மேலும், அய்யாக்கண்ணு பேசுவது ஒன்றும், செய்வது ஒன்றுமாக இருப்பதால் அவர் அறிவாலய வட்டாரத்தில் இருந்து தள்ளியே வைக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக ஸ்டாலின் எப்போது பார்க்க சம்மதிப்பார் என்று காத்திருக்கிறாராம் அய்யாக்கண்ணு.