எருமை திருடியதாக எம்.பி. ஆசம் கான் மீது வழக்கு.. புத்தக திருட்டு வழக்கு வேற! விடாது விரட்டும் போலீஸ்
சென்னை: எருமையை திருடியதாக சமாஜ்வாடி கட்சி எம்.பி ஆசம் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிப் மற்றும் ஜாகிர் அலி என்ற இருவர், அளித்த புகாரின் அடிப்படையில், ஆசம் கான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
5 பேருடன், 2016ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி, தங்கள் வீட்டிற்குள் நுழைந்து, தங்கள் இல்லத்தை சூறையாடியதாகவும், தங்களின் எருமையைத் திருடி எடுத்துச் சென்றதாகவும் புகாரில் இருவரும் கூறியுள்ளனர். ரூ. 25,000 ரொக்கப் பணத்தையும், ஆசம் கான், திருடிச் சென்றதாக, ஆசம் கானுக்கு எதிரான எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசம் கானுக்கு எதிராக, வழக்குப் பதிவு செய்யப்படுவது இது முதல் முறைகிடையாது. ஆசம் கான் மீது, நில அபகரிப்பு, வக்ஃப் சொத்துக்களை சட்டவிரோதமாக ஆக்கிரமத்தில், புத்தகங்களை திருடுவது மற்றும் தேர்தல்களின் போது வெறுக்கத்தக்க பேச்சுக்கள் போன்ற 50க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
திருச்சி தினத்தந்தி பிரிண்டிங் ஆபீசில் பயங்கர தீ விபத்து
முன்னதாக, ராம்பூரில் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 29 நில மோசடி வழக்குகளில் ஆசம் கான் முன் ஜாமீனுக்கு விண்ணப்பித்திருந்தார்.
எம்.பிக்கு எதிராக எருமை மாட்டு திருட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளதா என்று யாரும் ஆச்சரியப்பட வேண்டாம். கடந்த ஜூலை மாதம், இவருக்கு எதிராக புத்தக திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவமும் அரங்கேறியது.
முகமது அலி ஜுஹார் பல்கலைக்கழகத்தில் வேந்தராக ஆசம் கான் பதவி வகித்து வருகிறார். இங்கு ஜூலை மாதம், போலீசார் ரெய்டு நடத்தினர். அங்கு 2,000 புத்தகங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவை, மதரசா ஆலியா பல்கலைக்கழக நூலகத்தில் இருந்து திருடப்பட்டவை என போலீசார் தங்கள் வழக்கில் பதிவு செய்தனர்.