பிஇ படித்தவர்கள் இனி 6 முதல் 8 வகுப்புகளுக்கு ஆசிரியர் ஆகலாம்.. தமிழக அரசு அரசாணை வெளியீடு
சென்னை: பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் இனி 6 முதல் 8 வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு கணக்கு ஆசிரியர் ஆகலாம்,இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பொறியியல் படிப்பு முடித்தவர்கள் வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். 70 மற்றும் 80களில் ஊருக்கு ஒருவர் என்று இருந்த இன்ஜினயர்கள் பின்னாளில் 2000களில் தெருக்கு ஒருவராக மாறினார்கள். இப்போது வீட்டுக்கு ஒரு இன்ஜினியர்கள் என்று இருக்கிறார்கள். இதனால் வேலை என்பது எல்லோருக்கும் கிடைப்பது இல்லை.
ஆண்டு தோறும் லட்சம் பட்டதாரிகள் படித்து முடித்துவிட்டு வரும் போது சிலருக்கே படிப்புக்கு ஏற்ற வேலைகள் கிடைக்கின்றன. மற்றவர்கள் கிடைத்த வேலைகளை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழக அரசு பொறியியல் பட்டதாரிகளின் நலனை கருத்தில் கொண்டு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன்படி, பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎட் படித்து விட்டு டெட் தேர்வு எழுதி இனி 6 முதல் 8 வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு கணக்கு ஆசிரியர் ஆகலாம்
என்று அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது.