விராலிமலை தொகுதியை குறிவைக்கிறாரா பி.டி.அரசகுமார்...? ஓ.கே.சொல்லுமா திமுக?
சென்னை: தமிழக பாஜக துணைத்தலைவர் பி.டி.அரசகுமார் வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.ஆக வேண்டும் என விரும்புவதாக கூறப்படுகிறது.
அதிமுக, திமுகவில் இணைந்தால் மட்டுமே அந்த விருப்பம் நிறைவேறுவது சாத்தியம் என அவரது ஆதரவாளர்கள் அவரிடம் தூபம் போட்டுள்ளனர்.
இதையடுத்து தான் அவர் ஒரு முடிவோடு நேற்றைய திருமண விழாவில் பேசியதாகவும், பாஜக தலைமை எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்வது என்ற மனநிலையில் அவர் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாஜக நடவடிக்கை எடுத்தால் எடுக்கட்டும்.. ஸ்டாலினை வாழ்த்தியதற்கு பின் பிளான் இருக்கிறதா?.. அரசகுமார்!
திடீர் பாசமழை
புதுக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசு இல்லத் திருமணத்தில் கலந்துகொண்ட பாஜக துணைத் தலைவர் பி.டி.அரசகுமார், திமுகவினரே கூச்சப்படும் அளவுக்கு புகழோ புகழென்று ஸ்டாலினை புகழ்ந்து பேசினார். இந்தப் பேச்சு பாஜகவினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது ஒரு புறம் என்றால், ஒட்டுமொத்த அரசியல் நோக்கர்களையும் புருவம் உயர்த்தச் செய்தது.
வேதனை
இந்தப் பேச்சின் பின்னணி தொடர்பாக மணப்பாறை, விராலிமலை, கோவில்பட்டி பகுதிகளில் உள்ள அரசகுமாரின் ஆதரவாளர்கள் ஒரு சிலரிடம் கடும் முயற்சிக்கு பிறகு பேசிய போது, அண்ணன், அரசியலுக்காக எல்லா சொத்துக்களையும் இழந்து வருகிறார். ஆனால் அவரால் ஒரு எம்.எல்.ஏ.வாகவோ, எம்.பி.யாகவோ ஆக முடியவில்லை. பாஜகவில் உரிய கவுரவம் கிடைக்கும் என நினைத்து தான் சொந்தமாக நடத்தி வந்த கட்சியை கலைத்து விட்டு அங்கு இணைந்தார். ஆனால், மாநில துணைத் தலைவர் என்ற பதவியை தவிர வேறொன்றும் கிடைக்கவில்லை. தமிழிசை அக்கா சென்றதில் இருந்து அண்ணனுக்கான மரியாதை அங்கு மறுக்கப்படுகிறது என வேதனை தெரிவித்தார்கள்.
விராலிமலை குறி?
இதனிடையே அரசகுமாரின் பேச்சின் பின்னணியில் வேறு சில விவகாரமும் இருப்பதாக கூறப்படுகிறது. அரசகுமாரின் சொந்த ஊர் விராலிமலை. இப்போது அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அவரை எதிர்த்து 2021-ல் திமுக சார்பில் அரசகுமார் அந்த தொகுதியில் போட்டியிட்டாலும் ஆச்சரியபடுவதற்கில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
உண்மையில்லை
மேலும், இது தொடர்பாகவும் அரசகுமாரின் ஆதரவாளர்களிடம் கேட்கப்பட்ட போது, இதைப்பற்றி எங்களுக்கு தெரியாது, நீங்கள் சொல்வது உண்மையாக இருக்காது. ஏனென்றால் அவரை பாஜகவில் இருந்து நீக்க அங்கிருக்கும் சிலரே காய் நகர்த்தி வருவதை நாங்கள் அறியாமல் இல்லை. அவர்கள் கிளப்பிவிடுவது தான் இது போன்ற செய்திகளை எனத் தெரிவித்தனர்.