மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பிய சென்னை கிளைமேட்.! காற்று வீசினாலும் கூடவே வெளுக்கும் வெயில்
சென்னை: சுமார் 20 மணி நேரம் சென்னையில் நிலவி வந்த குளுமயைான தட்பவெப்ப நிலை இன்று வழக்கம் போல மாறிவிட்டது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் முடிந்து சுமார் 3 வாரங்களுக்கு மேலாகியும், தலைநகர் சென்னையை வெயில் வாட்டி வதைக்கிறது.
தற்போதயை நிலவரப்படி சுமார் 20 மணி நேரம் நிலவி வந்த, பலத்த காற்றுடன் கூடிய குளுகுளு தட்பவெப்பம் குறைந்து, மீண்டும் மிதமான அனல் கலந்த காற்றாலும், வெளுத்தெடுக்கும் வெயிலாலும் சென்னை நகரம் வாட துவங்கியுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 12-க்கும் மேற்பட்ட வட தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெப்ப நிலை சராசரியை விட மிக அதிகமாக பதிவாகி வருகிறது. மேலும் அனல் காற்றும் வீசி மக்களை வாட்டி வதைக்கிறது.
சென்னையில் மழை பெய்து சுமார் 200 நாட்கள் ஆக போகிறது. இதனால் கடும் வெப்பம் தலைநகரை வறுத்தெடுத்து வருகிறது. கொளுத்தும் வெயிலால் மக்கள் பகலில் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
சென்னை வாசிகளை ஒருபுறம் தண்ணீர் தேவை வாட்டுகின்றதென்றால், மறுபுறம் வெயில் வெளுத்தெடுத்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து, வெப்ப நிலை புதிய உச்சத்தை எட்டுவது வாடிக்கையாகி விட்டது.
உச்சகட்ட வெயிலின் தாக்கம், காற்றில் ஈரப்பதம் இல்லாதது உள்ளிட்டவற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னை வானிலை மையமும், மத்திய அரசும் பகல் 11 முதல் மதியம் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிர்த்து கொள்ள அறிவுறுத்தியுள்ளன.
எனினும் காலை 8 மணிக்கே பிற்பகல் 1 மணி போல வெயில் வெளுத்து வாங்குவதால், அலுவலகம் செல்வோர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவியர், அன்றாட கூலி வேலை செய்வோர் என பல்வேறு தரப்பினரும் மிக கடுமையாக அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதனிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் இன்னும் இரு நாட்களில் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றார். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தலைநகர் சென்னையில் வெப்பம் சிறிது குறையும். மேலும் 4 நாட்களில் தமிழகத்திற்கு தென்மேற்கு பருவமழைக்கான வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டார்.
வானிலை மையம் தகவல் தெரிவித்த சில மணி நேரத்திலேயே அதாவது நேற்று பிற்பகல் 3 மணிக்கு மேல் சென்னையின் சில முக்கிய பகுதிகள் மற்றும் புறநகர் பகுதியில் வெயில் முற்றிலும் குறைந்தது. பல இடங்களில் வானிலை குளுகுளுவென மாறியது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
திடீரென மாறிய வானிலையை பார்த்த மக்கள் இரவு சென்னைக்கு மழை வர வாய்ப்பிருக்கும் என நினைத்தனர், ஆனால் வானிலை மாறியதால் நேற்று மாலைக்கு பின் இன்று காலை வரை குளுமையாக இருந்த சென்னை கிளைமேட், இன்று பகல் 9 மணிக்கு பிறகு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது.
நல்ல கருமேக மூட்டம், நல்ல வேகமான குளுமையான காற்று என்றிருந்த தலைநகரின் தட்பவெப்பம், தற்போது பல இடங்களில் மீண்டும் அனல் கலந்த காற்று, வெளுத்து வாங்கும் வெயில் என பழைய ஃபார்முக்கு திரும்பி விட்டது.
இதனையடுத்து விரக்தியடைந்துள்ள சென்னை வாசிகள் மழை என்பது கனவாகி விடுமோ என கவலை அடைந்துள்ளனர்.